அறுசுவை.com (www.arusuvai.com)

தினம் ஒரு புது உணவு வகை, மொத்தத்தில் அறுசுவையும் இங்கே பரிமாறப்படும்.

Thursday, December 09, 2004

உருளைக்கிழங்கு கறி

ரொம்ப சுலபமான கறி. சுயமாய் சமைத்துச் சாப்பிடும் அனைத்து ஆண்களுக்கும் நன்கு தெரிந்த ஒரு கறி வகை இது. இதையே கொஞ்சம் "ரிச்" ஆக முந்திரி, நெய் எல்லாம் சேர்த்து எப்படி செய்வது என்பதற்கான குறிப்பு.

தேவையானவை

பெரிய உருளைக்கிழங்கு - கால் கிலோ
பெரிய வெங்காயம் - 2
நாட்டுத் தக்காளி - 2
மஞ்சள்பொடி - கால் தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - அரைத் தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - ஒர் சிட்டிகை
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கடலை பருப்பு - ஒரு தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - அரை மேசைக்கரண்டி
கடுகு - அரைத் தேக்கரண்டி
நெய் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு

செய்முறை

  • கால் கிலோ பெரிய உருளைக்கிழங்கினை அப்படியே முழுசாக குக்கரில் போட்டு வேகவிடவும். வெந்தபின் தோலை உரித்து பெரிய துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தக்காளியை பொடியாக நறுக்கி அத்துடன் கால் தேக்கரண்டி மஞ்சள்தூள், அரைத் தேக்கரண்டி மிளகாய்ப்பொடி, முக்கால் தேக்கரண்டி உப்பு, ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் இவைகளைப் போட்டு தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • பெரிய வெங்காயத்தை நீளவாட்டில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு அலுமினிய வாணலியை அடுப்பில் வைத்து அதில் அரைகரண்டி நல்லெண்ணெயை விட்டு காய விடவும்.
  • காய்ந்தபின் அரை தேக்கரண்டி கடுகைப் போட்டு வெடிக்கவிடவும். பிறகு ஒரு தேக்கரண்டி உளுத்தம்பருப்பு, ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு, ஒரு மேசைக்கரண்டி முந்திரிப்பருப்பு ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுக்கவும்.
  • பிறகு அதிலேயே நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் தக்காளி கலவையை அதனுடன் சேர்த்து வதக்க வேண்டும்.
  • தக்காளி நன்கு வதங்கி தொக்கு மாதிரி ஆனபின்பு அதில் கறிவேப்பிலையை பிய்த்துப் போட்டு அதனுடன் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கினையும் சேர்த்து நன்றாக கிளறவும்.
  • காயில் உப்பு, காரம் ஒட்டிக்கொண்ட பின் சிறிது நேரம் கிளறி விட்டு இறக்கிவிடவும்.
  • இறக்கிய பிறகு அதில் ஒரு தேக்கரண்டி நெய் விட்டால் அது உருகி வாசனையாக இருக்கும்.

1 Comments:

  • At 9:17 PM, ROSAVASANTH said…

    செய்து பார்த்தேன் சூப்பர். உங்களுக்கு நன்றி.

     

Post a Comment

<< Home