அறுசுவை.com (www.arusuvai.com)

தினம் ஒரு புது உணவு வகை, மொத்தத்தில் அறுசுவையும் இங்கே பரிமாறப்படும்.

Tuesday, November 30, 2004

கத்தரிக்காய் வற்றல்

பல நாட்கள் வீட்டுச் சாப்பாடு சாப்பிட இயலாதவர்கள், வீடு வந்ததும் முதலில் விரும்பிக் கேட்டுச் சாப்பிடுவது வற்றல் குழம்பினைத்தான். வெளியில் சாப்பிட்டுச் செத்துப் போன நாக்கினை உயிர்பிக்கும் சிறப்புக் குணம் அதற்கு உண்டு. மணத்தத்தக்காளி, மாங்காய் என்று பல வற்றல்களைக் கொண்டு வற்றல் குழம்பு தயாரிக்கப்பட்டாலும், கத்தரிக்காய் வற்றல் கொண்டு செய்யப்படும் குழம்பிற்கு ஒரு தனி மணமும், சுவையும் உள்ளது. கத்தரிக்காய் வற்றல் எப்படி செய்யவேண்டும் என்பதனை இங்குப் பார்க்கலாம்.

தேவையானவை

கத்தரிக்காய் - ஒரு கிலோ
புளி - நெல்லிக்காய் அளவு
மஞ்சள்பொடி - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை

  • பூச்சியில்லாத நல்ல கத்தரிக்காய்களாக தேர்வு செய்து, காம்பினை கிள்ளிவிட்டு நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
  • நறுக்கிய துண்டுகளை ஒரு ஈயம் பூசிய பாத்திரத்தில் போட்டு அதனுடன் மஞ்சள் பொடி மற்றும் உப்பினைக் கலந்து கொள்ளவும்.
  • புளியை நீரில் சிறிது நேரம் ஊறவைத்துப் பிறகு கரைத்து, கத்தரிக்காய் உள்ள பாத்திரத்தில் ஊற்றவும். கத்தரிக்காய் துண்டங்கள் மூழ்கும் அளவிற்கு புளி நீர் ஊற்றவும்.
  • பிறகு அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
  • ஒரு கொதி வந்த நிலையில் பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கி மூடி வைக்கவும்.
  • சுமார் ஒரு மணி நேரம் சென்ற பிறகு நீரை வடித்து விட்டு கத்தரிக்காய் துண்டங்களை எடுத்து வெய்யிலில் உலர்த்தவும்.
  • வெய்யிலில் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு நன்கு உலர்த்தி பிறகு எடுத்து பத்திரப்படுத்தவும்.
  • காரக் குழம்பு, வற்றல் குழம்புகளில் இதனை பயன்படுத்தலாம். குழம்பு கொதிக்கும் போது கடைசியாக இதனை குழம்பில் சேர்க்கவும்.

Monday, November 29, 2004

தம்மடை

இஸ்லாமிய மக்களின் சிறப்பு உணவு வகை இது. அவர்களது பண்டிகைக் கால விருந்துகள் அனைத்திலும் தவறாது இடம் பெறும் சுவையான பதார்த்தம்.

தேவையானவை

ரவா - ஒரு கிலோ
சீனி - ஒரு கிலோ
டால்டா - 400 கிராம்
பசுநெய் - 100 கிராம்
முந்திரி - 50 கிராம்
திராட்சை - 50 கிராம்
கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை
முட்டை - 6
பால் - அரை லிட்டர்
ஏலக்காய் - 10

செய்முறை
  • முதலில் பாலை நன்கு சுண்டக் காய்ச்சி ஆறவைக்கவும்.
  • முட்டையை உடைத்து ஊற்றி, அதில் பொடித்த ஏலக்காய் மற்றும் சீனியைச் சேர்த்து ஒரு கிரைண்டர் அல்லது பெரிய மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும்.
  • சீனி நன்றாக அரைபட்ட பிறகு ஒரு பாத்திரத்தில் ஊற்றி ரவா, பால் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • ஒரு தட்டில் (தாம்பாளம்) மண்போட்டு நன்கு சூடாகும் வரை எரித்து, பின்பு ஒரு தட்டையான பாத்திரம் அல்லது சட்டியை மண் மேல் வைத்து டால்டா, நெய் எல்லாம் ஊற்றி சூடு வந்ததும் நறுக்கிய முந்திரி மற்றும் திராட்சையைப் போட்டுப் பொரித்துக் கொள்ளவும்.
  • நன்கு பொரிந்ததும், ரவா, சீனி, முட்டை கலவையை ஊற்றி சற்று நேரம் விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
  • கலவை நன்கு திரண்டு வந்ததும் ஒரு மூடியை சட்டியின் மேல் வைத்து மூடி, அதன்மீது நெருப்புத் துண்டங்களைப் போட்டு நெருப்பு அணைந்துவிடாதவாறு விசிறியால் விசிறிக் கொண்டு இருக்கவும்.
  • கீழே அடுப்பு சீராக எரிந்தவண்ணம் இருக்கவேண்டும். சுமார் அரைமணி நேரம் சென்றபின் திறந்து பார்த்து, பொன்னிறம் வந்திருக்கும் பட்சத்தில் இறக்கி ஆறவைக்கவும்.
  • நன்கு ஆறிய பிறகு நமக்கு தேவையான வடிவங்களில் நறுக்கிக் கொள்ளலாம்.


கால அளவு: 45-60 நிமிடங்கள்
வழங்கியவர்: செல்வி. விஜி, நாகை

Sunday, November 28, 2004

பிஸி பேளா பாத்

கர்நாடக மக்களின் விசேஷ உணவு இது. சூடாக உண்ண சுவையாய் இருக்கும்.

தேவையானவை

அரிசி - ஒரு கப்
துவரம் பருப்பு - கால் கப்
புளி - ஒரு எலுமிச்சை அளவு
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
உருளைக்கிழங்கு - 2
தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி
கடுகு - அரைத் தேக்கரண்டி
வெந்தயம் - கால் தேக்கரண்டி
தனியா - ஒரு தேக்கரண்டி
பட்டை - ஒரு சிறிய துண்டு
கிராம்பு - 2
மிளகாய் வற்றல் - 5
பெருங்காயம் - கால் தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி

செய்முறை

  • புளியை சிறிது தண்ணீர் விட்டு ஊறவைக்கவும். உருளைக்கிழங்கினை சிறுதுண்டுகளாய் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, தனியா, உளுத்தம்பருப்பு, பட்டை, கிராம்பு, வெந்தயம், மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை சிவப்பாக வறுத்துக் கொள்ளவும்.
  • வறுத்தவற்றை தேங்காய்த் துருவலுடன் சேர்த்து அம்மியிலோ, மிக்ஸியிலோ இட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் 5 கப் தண்ணீர் விட்டு, தண்ணீர் கொதித்தவுடன் துவரம் பருப்பினைப் போட்டு சிறிது வெந்த பிறகு அரிசியைப் போடவும்.
  • அரிசி பாதி வெந்தவுடன் நறுக்கிய உருளைக்கிழங்கினைப் போடவும். அதுவும் வெந்தவுடன் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை ஊற்றி, அரைத்து வைத்துள்ள மசாலாவையும் போட்டு கொதிக்க விடவும்.
  • அடிபிடிக்காதவாறு அவ்வப்போது கிளறி விட்டுக் கொண்டே இருக்கவும்.
  • சாதம் நன்கு வெந்து வந்தபிறகு இறக்கி கடுகினை தாளித்துக் கொட்டவும்.


கால அளவு: 45-60 நிமிடங்கள்
வழங்கியவர்: திருமதி. பத்மா ராஜகோபால், நாகை.

Saturday, November 27, 2004

மீன் கபாப்

வட இந்தியாவில், கடற்கரையோர நகரங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற உணவு இது. ஒரு மாறுதலுக்காக முயன்று பாருங்கள்.

தேவையானவை
மீன் - 1 கிலோ
நெய் - 200 கிராம்
பெரிய வெங்காயம் - 2
முட்டை - 2
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
தனியாத்தூள் - 2 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
எலுமிச்சம்பழம் - 1 தேக்கரண்டி
ரொட்டித்தூள் - 1 கப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை
  • அதிகம் முட்கள் இல்லாத, சற்று பெரிய வகை மீனாய் தேர்ந்தெடுத்து வாங்கிக்கொள்ளவும்.
  • மீனை சில நிமிடங்கள் வேக வைத்துத் தண்ணீரை வடித்து ஆறவைக்கவும்.
  • பின்னர் தோல், எலும்புகளை நீக்கி நன்கு மசித்துக் கொள்ளவும்.
  • வாணலியில் சிறிது நெய் விட்டு காய்ந்தவுடன், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிப் போட்டு பொன்னிறமாக வதக்கி, அதனுடன் மீன் விழுதினைச் சேர்த்து வதக்கவும்.
  • ஈரம் வற்றிய பிறகு முட்டையை அடித்து, உப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலா, எலுமிச்சைசாறு கலந்து நன்கு கிளறி இறக்கவும்.
  • கலவையை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, அதனை வடை போல் தட்டிக் கொண்டு, ரொட்டித் தூளில் புரட்டி எடுத்து நெய்யில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.


கால அளவு: 30-45 நிமிடங்கள்
வழங்கியவர்: திரு. சண்முகம், நாகை.

Friday, November 26, 2004

அவித்த ஆம்லெட்

எளிதான, எல்லோரும் நன்கறிந்த உணவுதான். சற்று வித்தியாசமான முறையில் இங்கே தயாராகின்றது.

தேவையானவை
முட்டை - 1
மிளகுத்தூள் - கால் தேக்கரண்டி
வெண்ணெய் - கால் தேக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை
  • ஒரு அகன்ற வாணலியில் அரைபாகத்திற்கு நீர் விட்டு கொதிக்கவிடவும். கொதிவர ஆரம்பித்தவுடன் அடுப்பின் தீயைக் குறைத்துக் கொள்ளவும்.
  • முட்டையின் கூரிய பகுதியை சற்றுப் பெரிதாக உடைத்துக் கொள்ளவும். முட்டை கரு எளிதில் வெளியே வருமாறு உடைத்துக் கொள்ளவும்.
  • முட்டை கருவை ஒரே ஊற்றில், தெறிக்காதவண்ணம் அருகில் வைத்து, கொதிக்கும் நீரில் ஊற்றவும்.
  • இரண்டு நிமிடங்கள் வேகவிட்டு பிறகு எடுத்து நீரை வடித்துக் கொள்ளவும்.
  • சூடாக இருக்கும்போதே அதில் மிளகுத்தூள் உப்பு இரண்டையும் கலந்து தூவவும். வெண்ணெயை மேலே இலேசாக தடவி விடவும்.


கால அளவு: 10 நிமிடங்கள்
வழங்கியவர்: திருமதி. பாக்கியம், சென்னை.

Thursday, November 25, 2004

ஆந்திரா பருப்புப் பொடி

ஆந்திர மக்களின் அன்றாட உணவில் தவறாது இடம்பெறும் துணைப்பதார்த்தம் இது. ஒரு முறை செய்து பத்திரப்படுத்திவிட்டால் போதும். பல நாட்களுக்குப் பயன்படுத்தலாம். சுடு சோறு, பருப்புப் பொடி, மணக்கும் நெய், பொரித்த அப்பளம்.. இணையேதும் இல்லை இந்த 'காம்பினேஷனுக்கு'.

தேவையானவை
பொட்டுக்கடலை - 1/2 கிலோ
பெரிய பூண்டு தோலுடன் - 10 கிராம்
மிளகாய் வற்றல் - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு

செய்முறை
  • அடுப்பில் வாணலியை வைத்து நன்றாக காயவிடவும்.
  • உடைத்தப் பொட்டுக்கடலை, பெரிய பூண்டு, மிளகாய் வற்றல் மூன்றையும் ஒன்றாகப் போட்டு எண்ணெய் விடாமல் பொன்னிறமாக வறுக்கவும்.
  • வறுத்த கலவையை ஒரு தட்டில் கொட்டி பரப்பி ஆறவைக்கவும்.
  • கலவை ஆறியபிறகு மிக்ஸியில் இட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.
  • மாவு சல்லடையில் சலித்தும் எடுத்து வைத்துக்கொள்ளலாம்.
  • பூண்டினை விரும்பாதவர்கள் இதே முறையில் இந்த பொடியினைப் பூண்டு தவிர்த்தும் செய்யலாம்.
  • தேவையெனில் ஐந்து ஆறு கறிவேப்பிலை இலையினையும் வெறும் வாணலியில் சிறிது வறுத்து, சேர்த்தரைத்துக் கொள்ளலாம்.
  • சிலர் தேங்காயைத் துருவி, வறுத்து மற்ற பொருட்களுடன் சேர்த்து அரைத்துக் கொள்வதும் உண்டு. தேங்காய் சேர்க்கும் பட்சத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குள் அதனை உபயோகப்படுத்திவிட வேண்டும்.


கால அளவு: 15 நிமிடங்கள்
வழங்கியவர்: செல்வி. நிரஞ்சனா, பவானி.

Wednesday, November 24, 2004

சொதி

தேவையானவை

முருங்கைக்காய் - 2
முட்டைகோஸ் - 100 கிராம்
உருளைக்கிழங்கு - கால் கிலோ
பாசிப்பருப்பு - 400 மி.லி
பச்சைமிளகாய் - 5
இஞ்சி - 2 அங்குலத் துண்டு
சின்ன வெங்காயம் - 15
பூண்டு - 5 பல்
தேங்காய் - 2
எலுமிச்சை - 1
கடுகு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு

செய்முறை

  • தேங்காயைத் துருவி ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கெட்டிப்பால் எடுத்து தனியாக வைக்கவும்.
  • இரண்டாவது மூன்றாவது பாலை ஒன்றாய்ச் சேர்த்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
  • முட்டைக்கோஸ், முருங்கைக்காய், உருளைக்கிழங்கு ஆகியவற்றை நறுக்கிக் கொண்டு உரித்த வெங்காயத்துடன் உப்புச் சேர்த்து வேகவைத்து தனியாக வைக்கவும்.
  • பாசிப்பருப்பை வறுத்து எடுத்து அதனுடன் பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து மசிய வேகவிடவும்.
  • இப்போது வேகவைத்து எடுத்து வைத்துள்ள காய்கறிகளையும் இதனுடன் சேர்த்து இரண்டாவது மூன்றாவது தேங்காய் பாலினை ஊற்றிக் கிளறி வேகவிடவும்.
  • கொதிவரும் சமயம் இஞ்சியைத் தட்டி சாறு எடுத்து விடவும். அடிப்பிடித்து விடாமல் கிளறிவிட்டுக் கொண்டே இருக்கவும்.
  • கொதித்தவுடன் முதலில் எடுத்த தேங்காய் பாலினை விட்டு மீண்டும் கொதி வரும் சமயம் இறக்கி கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும். எலுமிச்சை சாறு பிழிந்து சேர்க்கவும்.

Tuesday, November 23, 2004

வறுத்த கோழி

தேவையானவை

கோழிக்கறி (எலும்பில்லாமல்) - அரை கிலோ
நறுக்கிய வெங்காயம் - கால் கப்
எண்ணெய் 2 - மேசைக்கரண்டி
நறுக்கிய காரட் - கால் கப்
நறுக்கிய குடைமிளகாய் - கால் கப்
உதிர்த்த காலிஃபிளவர் - கால் கப்
சோள மாவு - ஒரு மேசைக்கரண்டி
வினிகர் - ஒரு மேசைக்கரண்டி
சோயாசாஸ் - 2 தேக்கரண்டி
தேன் - 2 தேக்கரண்டி
எள்ளு - ஒரு மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை

  • கோழிக்கறியினைச் சுத்தம் செய்து நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, வளையங்களாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
  • பிறகு இஞ்சி பூண்டு விழுதினைச் சேர்த்து, நறுக்கி வைத்துள்ள காய்களையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • அதில் வினிகர், சிக்கன் துண்டுகள் மற்றும் எள்ளுப்பொடி சேர்த்து நன்கு வதக்கவும்.
  • சற்று வெந்ததும் சோயாசாஸ் விட்டு மீண்டும் வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி வேகவிடவும்.
  • சோளமாவினை நீரில் சற்று கெட்டியாக கரைத்து ஊற்றி வேகவிட்டு இறக்கி, பின் தேனை ஊற்றி சிவப்பு குடைமிளகாய்த் துண்டங்களைத் தூவி பரிமாறவும்.

Monday, November 22, 2004

மாங்காய் தொக்கு

தேவையானவை

மாங்காய் - 1 (பெரியது)
எண்ணெய் - 2 கப்
மிளகாய்த்தூள் - 1/4 கப்
மஞ்சள்தூள் - 2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 2 டீஸ்பூன்
கடுகு - 2 டீஸ்பூன்
வெந்தயம் - 20 கிராம்
உப்பு - கால் கப்

செய்முறை

  • வாணலியை காயவைத்து வெந்தயத்தை வெறும் சட்டியில் எண்ணெயில்லாமல் வறுத்துக் கொள்ளவும்.
  • வாசனை வந்தபின் எடுத்துவிடவும்.
  • பின் வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து துருவிய மாங்காய் உப்பு சேர்த்து ஒரு நிமிடம் பிரட்டி மாங்காயுடன் ஒரு கப் நீர் சேர்த்து நன்றாக வேகவிடவும்.
  • வெந்தபின் மஞ்சள் பொடி சேர்த்து நன்றாக கிளறவும்.
  • இன்னொரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு தாளித்து பெருங்காயப் பொடி, மிளகாய் பொடி, வெந்தயப் பொடி சேர்த்து உடனே அடுப்பை அணைத்துவிடவும்.
  • காரம் சேர்ந்த சூடான எண்ணெயை மாங்காயில் கொட்டி கிளறி காய்ந்த பாட்டிலில் போட்டு மூடிவிடவும்.
  • நன்கு ஊறி பதமானபின்பு பயன்படுத்தவும்.


வழங்கியவர் திருமதி. செல்வராணி, நாகை.

Sunday, November 21, 2004

பனீர் ப்ரெட் ரோஸ்ட்

தேவையானவை

ப்ரெட் ஸ்லைஸ் - 10
பனீர் - 100 கிராம்
முட்டை - 2
வெங்காயம் - 4
தக்காளி - 2
கொத்துமல்லித்தழை - தேவைக்கேற்ப
எண்ணெய் - 250 மி.லி.
இஞ்சி பூண்டு விழுது - 3 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
மிளகாய்பொடி - 2 தேக்கரண்டி
மஞ்சள்பொடி - 2 சிட்டிகை
மசாலா பொடி - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை

  • பனீர், வெங்காயம், தக்காளி, மிளகாய், மல்லிக்கீரை இவை அனைத்தையும் சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும் முட்டைகளை உடைத்து ஊற்றி பொரியவிடவும்.
  • பின்பு நறுக்கியவைகளை எண்ணெய்யில் போட்டு வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் பொடி, மஞ்சள்பொடி, மசாலாப்பொடி சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வதக்கவும்.
  • தண்ணீர் வற்றி பொரிந்தவுடன் அதனை எடுத்து ஒரு ப்ரெட் ஸ்லைஸ் மீது வைத்து அதன்மேல் மற்றொரு ஸ்லைஸ் வைத்து மூடி தவாவில் எண்ணெய் ஊற்றி அதில் பொரித்தெடுக்கவும்.


கால அளவு 25 நிமிடங்கள்
வழங்கியவர் செல்வி.விஜி, நாகை

Saturday, November 20, 2004

தேங்காய் பால் அல்வா

இது ஒரு சுலபமான தயாரிப்பு, சுவையானதும் கூட.

தேவையானவை

தேங்காய் ஒன்று
பச்சரிசி ஒரு கப்
சீனி ஒரு கப்

செய்முறை
  • தேங்காயைத் துருவி இரண்டு கப் அளவிற்கு பால் எடுத்துக் கொள்ளவும்.
  • பச்சரிசியை சிறிது நேரம் ஊற வைத்து ஒரு மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  • அரைத்த பச்சரிசி மாவினை தேங்காய் பாலுடன் கலந்து ஒரு கனமான பாத்திரத்தில் இட்டு மிதமான தீயில் வேகவிடவும்.
  • கட்டி விழாத வண்ணம் தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்கவும். கலவை நன்கு வெந்து வண்ணம் மாறியவுடன் சீனியைக் கொட்டி கிளறவும்.
  • கலவை வெந்து திரண்டு பால்கோவா பதத்திற்கு வந்தபிறகு இறக்கி வைக்கவும்.

Friday, November 19, 2004

சர்க்கரை போளி

அறுசுவை உணவு வகைகள் அனைத்தையும் தமிழில் கொடுக்க விரும்பி அறுசுவை.com என்ற இணையத்தளத்தைத் தொடங்கியுள்ளேன்.

தினமும் ஒரு உணவுக்கான செய்முறை இந்த வலைப்பதிவில் வெளியாகும். ஏன் ஏற்கனவே இணையத்தளத்தில் உள்ளதை மீண்டும் வலைப்பதிவில் போடவேண்டும் என்ற கேள்வி எழுவது நியாயமே. உங்கள் மேலான பின்னூட்டங்களை எதிர்பார்த்துத்தான் இந்த வலைப்பதிவு. மேலும் இந்த உணவு வகையில் என்ன மாற்றங்களைச் செய்யலாம், இதற்கு ஒத்த பிற உணவு வகை உள்ளதா என்பதை நீங்கள் எனக்கு எழுதியனுப்பினால் அதையும் என் தளத்தில் சேர்க்க முற்படுவேன். உங்கள் ஆதரவு எனக்கு இருக்கும் என்று நம்புகிறேன்.

முதலில், சர்க்கரை போளி

தேவையானவை

மைதாமாவு ஒரு கப்
கடலைப் பருப்பு ஒரு கப்
மண்டை வெல்லம் கால் கிலோ
தேங்காய் 1
ஏலக்காய் 4
நெய் சிறிது
நல்லெண்ணெய் சிறிதளவு

செய்முறை

  • மைதாவை தண்ணீர் ஊற்றி சற்று தளர்ச்சியாக பிசையவேண்டும்.
  • பிசைந்தபின் மேலாக சிறிது நல்லெண்ணெய்யை ஊற்றி 3 மணி நேரத்திற்கு அப்படியே விட்டு வைக்கவும்.
  • கடலைப்பருப்பை முக்கால் வேக்காடாக வேகவைத்து இறக்கி, நீரை நன்கு வடித்துவிட்டு இத்துடன் நுணுக்கிய மண்டைவெல்லம் சேர்த்து தண்ணீர் தெளிக்காமல் அம்மியில் வைத்து அரைக்கவும்.
  • தேங்காயை துருவி எடுத்த பூவை நன்கு நெய்யில் வதக்கி, அரைத்து வைத்துள்ள பருப்பு, வெல்லக் கலவையுடன் சேர்த்து, சிறிது நுணுக்கிய ஏலக்காயையும் கூடச் சேர்த்து கலந்து சிறு சிறு உருண்டைகளாய் உருட்டி வைத்துக்கொள்ளவும்.
  • பிறகு, பிசைந்து வைத்த மைதாமாவை எண்ணெய் தடவிய பூரிப் பலகையின் மேல் சிறிது சிறிதாக உருட்டி எடுத்து வைத்துக் கையால் தப்பி, விரித்து விடவும்.
  • இதன் நடுவில் கடலைப்பருப்பு, வெல்லம், தேங்காய்ப்பூ கலவையை சிறு சிறு உருண்டைகளாய் உருட்டி வைத்து மூடி, மீண்டும் இதை கையால் தப்பி, சப்பாத்தி அளவிற்கு விரித்து விடவும்.
  • இதனை தோசை கல்லில் இட்டு, நெய் ஊற்றி இருபுறமும் சிவந்து வெந்ததும் எடுக்கவும்.
  • குறிப்பு: மைதாமாவினை மென்மையாக்க ஒரு சிட்டிகை சோடாஉப்பு சேர்த்துக்கொள்ளலாம். அதிகம் சேர்த்தல் கெடுதி.
  • வெல்லத்துடன் அரைத் தேக்கரண்டி கல் உப்பு சேர்த்து அரைக்க சுவை இன்னும் கூடும்.


கால அளவு: 60 நிமிடங்கள்
வழங்கியவர்: திருமதி. ராஜம், தஞ்சை.