அறுசுவை.com (www.arusuvai.com)

தினம் ஒரு புது உணவு வகை, மொத்தத்தில் அறுசுவையும் இங்கே பரிமாறப்படும்.

Friday, February 18, 2005

உப்பு கறி

ஆட்டுக்கறியில செய்யுற அயிட்டம் ஒண்ணு கூட இதுவரைக்கும் போடலைன்னு ஒரு குறை இருந்துச்சு. அதுக்காகவே இந்த உப்புக்கறி. ரொம்ப ஈஸியா செய்யக்கூடிய ஐட்டம். குறிப்பா பேச்சுலர்ஸ் க்கு ரொம்ப வசதியான சைடு டிஷ்.

தேவையானப் பொருட்கள்

எலும்பு நீக்கிய ஆட்டுக்கறி - கால் கிலோ
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பூண்டு - 50 கிராம்
மிளகாய் வற்றல் - 8
சீரகம் - கால் தேக்கரண்டி
பட்டை - 2 சிறியத் துண்டுகள்
சமையல் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு

செய்முறை

  • எலும்பு நீக்கிய ஆட்டுக் கறியை எடுத்துக் கொண்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அலசி வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயம், பூண்டினை உரித்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு சிறிய குக்கரை அடுப்பில் வைத்து அரைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய்களை உடைத்துப் போட்டு வதக்கவும்.
  • மிளகாய் வதங்கியபின் உரித்து வைத்துள்ள வெங்காயம் பூண்டினைப் போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும்.
  • பிறகு அதில் அலசி வைத்துள்ள கறியைக் கொட்டி ஒரு நிமிடம் வதக்கவும்.
  • வதக்கியப்பின் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஐந்து விசில் வரும் வரை குக்கரை மூடி வைத்து வேகவிடவும்.
  • பிறகு குக்கரை இறக்கி வைத்து நீராவி வெளியேற விடவும். ஒரு வாணலியில் மீதமுள்ள எண்ணெய்யை ஊற்றி சீரகம் தாளித்து அதனுடன் பட்டையையும், கறிவேப்பிலையையும் போட்டு தாளிக்கவும்.
  • இதனுடன் குக்கரில் வைத்துள்ள கறியையும் கொட்டி வேகவிடவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
  • தண்ணீர் வற்றி எண்ணெய் வெளிவரும் வரை கிளறவும். பிறகு கொத்தமல்லித் தழைத் தூவி இறக்கவும்.

7 Comments:

  • At 8:54 AM, துளசி கோபால் said…

    அன்புள்ள பாபு,

    சூப்பர் ரெஸிபி. எளிதாச் செஞ்சுரலாம்! ஆமா, குக்கருக்கு ஏதுங்க 'காத்து?'

    //குக்கரில் காற்று போனபின் //

    என்றும் அன்புடன்,
    துளசி

     
  • At 11:43 AM, D.V.Babu said…

    வாங்க அக்கா.. அசைவ ரெஸிபி போடுறோம், ஜெய்ஸ்ரீ அக்கா கிட்டே இருந்து தப்பிச்சுட்டோம்னு நெனைச்சேன். உங்களை மறந்தே போயிட்டேன்.

    எனக்கு எழுதி கொடுத்து இருந்ததை தூக்க கலக்கத்துல அப்படியே டைப் பண்ணிட்டேன். அந்த வரியை கொஞ்சம் இப்படி மாற்றிடுங்க. 'குக்கரில் உள்ள நீராவி முழுவதும் வெளியான பிறகு' ..

     
  • At 2:34 PM, D.V.Babu said…

    உப்பு கறி ன்னு பேரை போட்டுட்டு உப்பு எப்ப சேர்க்கறதுங்கிறதை எனக்கு எழுதிக் கொடுத்தவங்களும் மறந்துட்டாங்க.. நானும் மறந்துட்டேன். நல்லவேளை.. யாரும் பார்க்கலை..

     
  • At 6:10 PM, ROSAVASANTH said…

    பாபு பண்ணிக்கிட்டிருக்கேன், முடிஞ்சு சாப்பிட்டு பாத்து எழுதறேன் (துரதிர்ஷ்டவசமா இங்க ஆடு (சாதாரணமா) கிடைக்காது, அதுக்கு பதிலா பீஃப்! எப்படி வருதுன்னு பாக்கலாம்!

     
  • At 7:39 PM, ROSAVASANTH said…

    அய்யோ, அய்யோ அய்யோ , நான் பொதுவா பண்ணர சுக்காவைவிட ரொம்ப ரொம்ப ஸூப்பர்! இன்னும் கொஞ்ச நாளுக்கு இது ஓடும்!

     
  • At 7:54 PM, ROSAVASANTH said…

    பள்ளிபாளயம் சிக்கன் பற்றி தெரியுமா? வேண்டுமெனில் இங்கே ரெசிப்பி தருகிறேன். இதை சாப்பிடும்போது ஞாபகம் வந்தது.

     
  • At 10:39 AM, D.V.Babu said…

    டியர் வசந்த், நேத்து முழுக்க நெட் கனெக்ஷன் ப்ராப்ளம். எதுவும் செய்யமுடியலை. உங்க பள்ளிப்பாளையம் சிக்கன் ரெஸிபிய உடனே எனக்கு மெயில் பண்ணுங்க. இன்னும் வேற என்னவெல்லாம் கைவசம் இருக்கோ அத்தனையும் இந்த பேராசைகாரனுக்கு அனுப்பி வைங்க.. எனக்குத் தேவை ரெஸிபி.. ரெஸிபி.. ரெஸிபி.. (என்னைப் பற்றி எனது நண்பர்கள் வட்டத்தில் உலா வரும் தற்போதைய ஜோக்.)

    'பிச்சைக்காரனுக்கும், பாபுவுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?'
    'பிச்சைக்காரன் சாப்பாடு கேட்டு வீடு வீடா அலைவான். பாபு சாப்பாடு செய்யறது எப்படி ன்னு கேட்டு அலைவான்'.

     

Post a Comment

<< Home