அறுசுவை.com (www.arusuvai.com)

தினம் ஒரு புது உணவு வகை, மொத்தத்தில் அறுசுவையும் இங்கே பரிமாறப்படும்.

Friday, May 13, 2005

துள்சி'ஸ் ஸ்பெஷல் கொருமா!!!

இன்றைக்கு நமக்காக ஒரு புதிய ரெஸிபியைக் கொடுக்க அறுசுவை வலைப்பதிவுக்கு வந்து இருக்காங்க, நம்ம எல்லோரோட அன்புக்கும் பாத்திரமான, நம்ம "துளசியக்கா". உங்க எல்லோர் சார்பாகவும் அவர்களை வருக! வருக! என்று வரவேற்கின்றேன். அவருடைய சொந்த தயாரிப்பான, கொழம்பும குருமாவும் சேர்ந்த "கொருமா" எப்படி செய்யறதுன்னு இப்ப அவரே உங்களுக்கு சொல்ல போகின்றார். ரெடியா?

வணக்கம்.

அசைவக் குழம்பும் குருமாவும் சேர்த்து உண்டாக்கிய ஸ்பெஷல் கொருமா ( கொழம்பு/குருமா?) இது.

எப்பவுமே சமையலை ஒரே மாதிரியா செய்யற ஆளில்லை நானு. ஒரே கறி/குழம்பையே வெவ்வேறு விதமாத்தான் செய்வேன், செய்யணும்( அப்படின்னு வேண்டுதல்!) .

இது அசைவ பதார்த்தம். ஆரம்பிக்கலாமா, சமையலை?

தேவையான பொருட்கள்:

மட்டன் - அரைக் கிலோ
கத்தரிக்காய் - நாலு/அஞ்சு
பூண்டு - பத்து பல்லு
இஞ்சி - 10 கிராம்( பெரிய துண்டா 1)
பச்சை மிளகாய் - 10
பெரிய வெங்காயம் - 2/3
தக்காளிப் பழம் - 4/5
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
மல்லித் தூள் - 3 டீஸ்பூன்
இறைச்சி மசாலாப் பொடி - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - உங்க இஷ்டம் போல
தேங்காய் - அரை மூடி( நான் போடறது 'டெஸிகேட்டட்' அரைக் கப்)
முந்திரிப் பருப்பு - 5/6
கசகசா - 2 டீஸ்பூன்

தாளிக்க:
கருவேப்பிலை - கொஞ்சம்( ரெண்டு இணுக்கு?)
பட்டை - ஒரு சின்னத்துண்டு
கிராம்பு - 2/3
சோம்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்

சாமான்கள் எல்லாம் எடுத்து வச்சுக்கிட்டீங்களா?

இறைச்சியைச் சின்னத்துண்டா அரிஞ்சு கழுவி ஒரு வடிகட்டிலே வச்சுருங்க.

மிக்ஸியிலே சட்டினி ஜார் வச்சு, கசகசாவைப் போட்டு அரையுங்க. தண்ணியெல்லாம் இப்ப ஊத்தவேணாம். அது அரைபட்டவுடனே முந்திரியையும் சேர்த்து அரையுங்க. அப்புறம் தேங்காய் சேருங்க. டெஸிகேட்டட்ன்னா தண்ணிவிடாம அரையுங்க அதுவே பவுடராப் போயிரும். (பச்சைத் தேங்காய்ன்னா ஒரு சுத்து அரைச்சுக்கணும்)அதுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமாத் தண்ணி சேர்த்து அரைக்கலாம். மையா அரைஞ்சு போனதை ஒரு கிண்ணத்துலே எடுத்து வச்சுக்குங்க. இப்ப இன்னும் கொஞ்சம் தண்ணியை ஜார்லே ஊத்தி 5 செகண்டு அரைச்சு அதையும் எடுத்துக் கிண்ணத்துலேயே சேர்த்துடுங்க. ஆச்சா?

வெறும் சட்டினி ஜாரை மட்டும் இன்னைக்கு உபயோகப்படுத்தப் போறோம். அதே ஜார்லே பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய்யைப் போட்டு கொஞ்சமாத் தண்ணி ( 2 டீஸ்பூன்) விட்டு அரைச்சு எடுத்து வையுங்க.

இப்ப வெங்காயத்துண்டுங்களையும் தண்ணி விடாம அரைச்சு வையுங்க. இதே போல தக்காளிப் பழங்களையும் தனியா அரைச்சு வச்சுகுங்க.

ஒரு வாணலியை அடுப்புலே வச்சு 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டுக் காய்ஞ்சதும் இறைச்சித்துண்டுங்களைப் போட்டுக் கிளறுங்க. நிறம் மாறியதும், மஞ்சள் தூளைச் சேர்த்துக் கிளறுங்க. பூண்டு இஞ்சி, பச்சை மிளகாய் அரைச்சு வச்சதையும் இப்பச் சேர்த்துக் கிளறுங்க. கறிப் பவுடர், மல்லிப் பவுடர் சேர்த்துக்கிளறுங்க.

ரெண்டு நிமிஷம் ஆனதும் அரைச்சுவச்ச வெங்காயம் சேர்க்கணும். ஒரு பக்கம் இதைச் செய்யறப்பவே, கத்தரிக்காயைக் கழுவிட்டு, ச்சின்னச்சின்னத் துண்டாவெட்டிக்கணும். இப்ப அதையும் சேர்த்துக்கிளறிட்டு, உப்பையும் சேர்த்துக் கிளறிட்டு, அரைச்சு வச்சத் தக்காளியையும் சேர்த்துக் கிளறணும்.

இப்ப உங்களுக்கு ரெண்டு ச்சாய்ஸ் தரேன். சமையலை வேகமா முடிக்கணுமா இல்லெ நேரம் இருக்கா நிதானமா செய்யறதுக்கு?

ப்ரெஷர் குக்கர் இருக்கா? ( நம்ம இந்தியாவுலே கட்டாயம் எல்லா வீட்டுலேயும் இருக்கும். இங்கெ வெள்ளைக்காரங்க வீட்டுலே அநேகமா இருக்காது!)
நேரம் இருந்தாலுமே என்னை மாதிரி சமையலை அடுப்புலே விட்டுட்டு கம்ப்யூட்டர் முன்னாலே வந்து உக்காந்துக்கறவங்க எதுக்கும் ப்ரெஷர் குக்கரை எடுத்துக்குங்க. எத்தனைநாள் அடுப்புலே வச்சிட்டு அது கருகிப் போயிருக்குத் தெரியுமா?

எல்லாத்தையும் ஒரு பாத்திரத்துலே போட்டு குக்கருலே வச்சு வெயிட் போட்டு ஒரு விசில் வந்ததும் 'சிம்'லே 16 நிமிஷம் வையுங்க. அதென்ன 16 நிமிஷம்? ச்சும்மாத்தான் உங்க கவனம் சிதறாம இருக்கறதுக்கு :-) வாணலியை ஒரு தட்டு போட்டு மூடிவையுங்க. இன்னும் அதுலெ கொஞ்சம் வேலை பாக்கி இருக்கு! ஸ்டீம் அடங்கட்டும்.

நேரடியா அடுப்புலே சமைக்கப்போறேன்னு சொல்றவுங்க கடைசியாத் தக்காளி சேர்த்துக் கிளறினதுக்கு அப்புறம் ஒரு ரெண்டு டம்ப்ளர் தண்ணி சேர்த்து வேகவிடுங்க. மறக்காம அப்பப்பக் கிளறிவிடுங்க. அடுப்பு நிதானமா எரியட்டும், அதான் நேரமிருக்கே!

சமையலோட கடைசிப் பகுதிக்கு வந்துட்டோம். ப்ரெஷர் குக்கர்காரங்க, அதை மீண்டும் அந்த வாணலியிலேயே போட்டு அடுப்புலே ஏத்துங்க. இப்ப ரெண்டு க்ரூப்பும் அரைச்சுவச்சிருக்கற தேங்காய், முந்திரி, கசகசாக் கலவையை கொருமாலே சேர்த்துக் கொதிக்கவிடுங்க.

இதுதான் கட்டக்கடைசி. தாளிக்கற வால்கரண்டியை அடுப்புலே வச்சு எண்ணெய் ஊத்தி அது காஞ்சதும் தாளிக்க எடுத்துவச்ச சாமான்களைப் போட்டு சோம்பு வெடிச்சு, கருவேப்பிலை படபடான்னு வெடிச்சதும் அதை அப்படியே எடுத்துக் கொதிச்சுக்கிட்டு இருக்கற கொருமாவுலே ஊத்துங்க.

இந்த ரெஸிபி இவ்வளவு நீளமா இருக்கேன்னு பயந்துறாதீங்க. உண்மையைச் சொன்னா நான் இதைத் தட்டச்சு செய்யறப்பவே என்னடா இவ்வளவு பெருசா இருக்கே, இதை எழுதற நேரத்துலே நேத்து கொருமா வச்சே முடிச்சிட்டமேன்னு நினைச்சேன்!

துள்சி'ஸ் ஸ்பெஷல் கொருமா செஞ்சு பார்த்து, தின்னுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க. சரியா?

வெஜிடேரியன்ஸ் உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி, கேரட் போடுங்க. இதுக்கு குக்கர் வேணாம். அப்படியே வாணலியிலேயே செஞ்சுக்குங்க. கத்தரிக்காய் உருத்தெரியாம க்ரேவியா ஆயிரும். அப்பத்தானே காய்கறி பிடிக்காத என் பொண்ணை அல்லது இந்த ரகக் குழந்தைகளைக் காய் சாப்பிடவைக்க முடியும்:-))))


மீண்டும் ஒரு முறை சுருக்கமாக(அறுசுவை நடையில்) இந்த செய்முறையைப் பார்த்துடுவோம்.

தேவையானப் பொருட்கள்

மட்டன் - அரைக் கிலோ
கத்தரிக்காய் - 4
பூண்டு - 10 பல்லு
இஞ்சி - 2 அங்குல துண்டு
பச்சை மிளகாய் - 10
பெரிய வெங்காயம் - 2
தக்காளிப் பழம் - 4
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மல்லித் தூள் - 3 தேக்கரண்டி
இறைச்சி மசாலாப் பொடி - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 3 மேசைக் கரண்டி
உப்பு - தேவையான அளவு
தேங்காய்த் துருவல் - அரை கப்
முந்திரிப் பருப்பு - 5
கசகசா - 2 தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிது
பட்டை - ஒரு சின்னத்துண்டு
கிராம்பு - 2
சோம்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி


செய்முறை

  • இறைச்சியை கழுவி சுத்தம் செய்து கொண்டு சிறுத் துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். கத்தரிக்காயையும் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • கசகசா, முந்திரி, தேங்காய் ஆகியவற்றை ஒன்றாய் சேர்த்து, தண்ணீர் அதிகம் சேர்க்காமல் ஒரு மிக்ஸியில் இட்டு அரைத்துக் கொள்ளவும்.
  • இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய்களை விழுதாக அரைத்துக் கொள்ளவும். அதேபோல், வெங்காயம், தக்காளி ஆகியவற்றையும் தண்ணீர் சேர்க்காமல் தனித்தனியே அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் 3 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு, காய்ந்ததும் இறைச்சி துண்டங்களைப் போட்டு வதக்கவும். நிறம் மாறியதும் மஞ்சள் தூள் சேர்த்துக் கிளறவும்.
  • அதன் பிறகு இஞ்சி, பூண்டு, மிளகாய் விழுதினையும் சேர்த்து நன்கு கிளறவும். அத்துடன் கறி மசாலாத் தூள், மல்லித்தூள் சேர்த்து கிளறி இரண்டு நிமிடங்கள் நன்கு வேகவிடவும்.
  • பிறகு அரைத்து வைத்துள்ள வெங்காய விழுது, நறுக்கின கத்தரிக்காய் துண்டங்கள், தக்காளி விழுது, தேவையான உப்பு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாய் சேர்த்து நன்கு கிளறி வேகவிடவும்.
  • அதன் பிறகு இதில் இரண்டு கப் தண்ணீர் விட்டு, மிதமான தீயில் அவ்வபோது கிளறிவிட்டு நன்கு வேகவிடவும்.
  • இதனை அப்படியே குக்கரில் வைத்தும் வேகவிடலாம். குக்கர் எனில் ஒரு விசில் வந்ததும் சுமார் கால் மணி நேரம் குறைந்த தீயில் வைத்திருந்து பிறகு எடுத்து வாணலிக்கு மாற்றிக் கொள்ளவும்.
  • இப்போது அரைத்து வைத்துள்ள முந்திரி. கசகசா, தேங்காய் விழுதினைச் சேர்த்து கொதிக்கவிடவும்.
  • இறக்குவதற்கு முன்பு மற்றொரு வாணலி அல்லது தாளிக்கும் கரண்டியில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டு கடுகு, பட்டை, கிராம்பு, சோம்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து கொருமாவில் ஊற்றி இறக்கவும்.
  • சைவ உணவுக்காரர்கள் இறைச்சிக்கு பதில் உருளைக்கிழங்கு, கேரட், பட்டாணி சேர்த்துக் கொள்ளலாம்.

2 Comments:

  • At 1:20 PM, அல்வாசிட்டி.விஜய் said…

    ஆஹா!!! துளசியக்கா 'அறுசுவை' பக்கத்தையும் விட்டு வைக்கவில்லையா? கலக்குங்க.

     
  • At 2:55 PM, ரவியா said…

    துளசி ! டாப் !
    நீங்க சைவமா? அசைவமா? அசைவமுனா படா பாண்டிச்சேரி சமையல் குறிப்புக்குகள் வைச்சிருக்கிறேனே..(எங்க ஊட்டுக்காரங்க தயவால்..ஹி ஹி )

    நம் ஊரில் லாரியில் "ஆட்கள்" கூப்பிட்டுகொண்டு வர மாதிரி அல்வா விஜய் எங்க பாத்தாலும் பின்னாடியே வந்திடராரே !!!

    :))
    விஜய், ஜோக் ! ஹி ஹி

     

Post a Comment

<< Home