அறுசுவை.com (www.arusuvai.com)

தினம் ஒரு புது உணவு வகை, மொத்தத்தில் அறுசுவையும் இங்கே பரிமாறப்படும்.

Wednesday, March 30, 2005

பில்ல குடுமு

தேவையானப் பொருட்கள்

பச்சரிசி - கால் படி(உடைத்தது)
பயத்தம்பருப்பு - 100 மில்லி
கடலைப்பருப்பு - 2 மேசைக்கரண்டி
தேங்காய் - ஒன்று
அரிசிமாவு - 100 மில்லி
வெல்லம் - 200 கிராம்
முந்திரி - 4
கசகசா - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


செய்முறை

  • முதலில் பயத்தம்பருப்பை குழையாமல் வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். கடலைப்பருப்பினை ஊற வைத்துக் கொள்ளவும்
  • . தேங்காயில் அரை மூடியினைத் துருவிக் கொள்ளவும். பின் ஒரு வாணலியில் முக்கால் லிட்டர் தண்ணீர் வைத்து தேவையான உப்பு போட்டு கொதிக்க வேண்டும்.
  • கொதிக்கும் போது ரவையாக உடைத்த பச்சரிசியைக் கொட்டி மூடி வைக்க வேண்டும்.
  • 5 நிமிடம் கழித்து இறக்கி, ஊற வைத்த கடலைப்பருப்பு, வேகவைத்த பயத்தம்பருப்பு துருவிய தேங்காய் அனைத்தும் போட்டு நன்கு கிளற வேண்டும்.
  • பின் கை பொறுக்கும் சூட்டில் சிறுசிறு வடை போல் தட்டி இட்லி தட்டில் வைத்து இட்லி போல் வேக வைத்து எடுக்க வேண்டும்.
  • இதற்கு தொட்டுக்கொள்ள கீழ்கண்டவாறு பாயசம் செய்து கொள்ளவும்.
  • அடுப்பில் 100 மில்லி தண்ணீர் வைத்து 2 சிட்டிகை உப்பு போட்டு தண்ணீர் கொதிக்கும் போது அரிசி மாவினைக் கொட்டி கிளற வேண்டும்.
  • கொழுக்கட்டை மாவுபோல் கிளறி இறக்கி தேன்குழல் அச்சில் போட்டு ஒரு தட்டில் பிழிந்து ஆவியில் வேக வைத்து எடுத்துக் கொள்ளலாம்.
  • தீடீர் இடியாப்ப மாவு அல்லது கொழுக்கட்டை மாவு இருந்தாலும் பயன்படுத்தலாம். மீதமுள்ள அரை மூடித் தேங்காயில் கால் மூடியைத் துருவி எடுத்துக் கொள்ளவும்.
  • பின் மிக்ஸியில் தேங்காய், கசகசா இரண்டும் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் வெல்லம் போட்டு கரைந்ததும் கல், மண் இல்லாமல் வடிகட்டிக் கொதிக்கவிடவும். அந்த
  • நீர் கொதிக்கும் போது அரைத்த தேங்காய், கசகசா விழுதை சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து இந்த வெல்லப்பாகில் ஊற்றவும்.
  • பின் வேக வைத்த குழல்களை எடுத்து இந்த வெல்லம் விழுது கரைசலில் போட்டு, 10 நிமிடம் கழித்து இறக்கி முந்திரி தாளித்து கொட்டவும்.

Tuesday, March 29, 2005

சண்டிக்கீரை சுருள் பொரியல்

சண்டிக்கீரையென்றால் எதுவென்று தெரியாதவர்களுக்கு, வருத்தப்படாதீர்கள். பெயர் தெரியாமலே இதனைப் பல இடங்களில் நீங்கள் பார்த்து இருப்பீர்கள். தெரிந்தால் 'அட இதுதானா அது'! என்று ஒரு சின்ன ஆச்சரியம் எழும். விடுதிகள், பூங்காக்கள், வீடுகள் என்று அலங்காரச் செடிகள் இருக்குமிடங்களில் எல்லாம் இந்தச் செடியினை நீங்கள் பார்த்து இருக்கலாம். கழுவித் துடைத்து விட்டது போல் பளீரென்று கிளிப்பச்சை நிறத்தில், சற்றுப் பெரிய இலைகளுடன் எப்போதும் மலர்ச்சியாய், அடர்த்தியாய் இருக்கும். செடியா, மரமா என்று இனம் பிரிக்க இயலாத ரெண்டுங்கெட்டான் ரகம் இது. (பார்க்க படம்..)

மூட்டு வலிக்கு ரொம்ப நல்லதுன்னு எல்லாரும் சொல்றாங்க..

தேவையானப் பொருட்கள்

சண்டிக்கீரை - 10 இலைகள்
எண்ணெய் - 2 கரண்டி
கடுகு - கால் கரண்டி
துவரம் பருப்பு - 4 கரண்டி
தேங்காய் - (துருவியது)அரை மூடி
மிளகாய் வற்றல் - 2
சீரகம் - அரைக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை

  • துவரம் பருப்பை 2 மணிநேரம் ஊறவைத்து அத்துடன் இலை தவிர மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • கீரையின் நடுவில் உள்ள காம்பை எடுத்து விட்டு ஒரு பலகையின் மீது வைத்து இலையின் பின்புறத்தில் இந்த விழுதை மெலிதாக தடவ வேண்டும்.
  • இலையை மெலிதாக நெருக்கமாக சுருட்ட வேண்டும்.
  • ஒரு வாணலியில் தண்ணீர் ஊற்றி கொதி வந்தவுடன் ஒரு தட்டில் எண்ணெய் தடவி சுருட்டி வைத்துள்ள கீரையை வைத்து மூடி 20 நிமிடம் வேக விடவும்.
  • வெந்த பிறகு அவற்றை எடுத்து வட்ட வடிவமாக சிறிது மொத்தமாக துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து நறுக்கின துண்டங்களை போட்டு 2 நிமிடம் வதக்கி எடுக்கவும்.

Saturday, March 26, 2005

7 ஸ்டார் கேக்

தேவையானப் பொருட்கள்

பால் - அரை லிட்டர்
சர்க்கரை - ஒன்றரை கப்
கடலைமாவு - ஒருகப்
தேங்காய் - ஒரு கப் துருவியது
ரவை - ஒரு கப்
மைதாமாவு - அரை கப்
காரட் - ஒரு கப் துருவல்
ஏலம் - 3
பேரிச்சைபழம் - ஒரு கப்
நெய் - 300 கிராம்
முந்திரிபருப்பு - கொஞ்சம்
செர்ரி பழம் - அலங்கரிக்க


செய்முறை

  • முதலில் காரட்டை பாலில் வேக வைத்து மசித்துக் கொள்ளவும். பேரிச்சம் பழத்தையும் வேக வைத்து மசித்து எடுத்துக் கொள்ளவும்.
  • தேங்காய் துருவலை வறுத்து எடுத்துக் கொள்ளவும். பாலை சுண்டக் காய்ச்சி கோவா தயாரிக்கவும்.
  • அடிகனமான பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு சர்க்கரை பாகு காய்ச்சவும்.
  • கம்பி பதம் வரும் போது மைதா, ரவை, கடலைமாவு போட்டு கிளறவும்.
  • பிறகு நெய் ஊற்றி கிளறவும். கோவா சேர்த்து கிளறி ஏலப்பொடி தூவவும்.
  • கேக் பதத்தில் வந்தவுடன் நெய் தடவிய தாம்பாலத்தில் கொட்டி அதில் முந்திரி பருப்பு ஒரு செர்ரி போட்டு அலங்கரிக்கவும்.
  • ஆறியவுடன் கேக் துண்டுகள் போட்டு உடனே சாப்பிடவும்.

Friday, March 25, 2005

மசாலா முத்து மணி கொழுக்கட்டை

தேவையானப் பொருட்கள்

புழுங்கல் அரிசி - அரை படி
கடலைப்பருப்பு - 100 கிராம்
துவரம் பருப்பு - 50 கிராம்
மிளகாய் வற்றல் - 10
உப்பு - 3 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
கறிவேப்பிலை - 2 கொத்து
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி

செய்முறை

  • புழுங்கல் அரிசி மற்றும் பருப்பு வகைகளை தனித்தனியே அரை மணிநேரம் ஊற விடவும்.
  • முதலில் அரிசியை கிரைண்டரில் உப்பு போட்டு கெட்டியாக நன்கு அரைக்கவும்.
  • அரைத்த மாவை பட்டாணி சைசில் சிறு சிறு உருண்டைகளாக இட்லி தட்டில் உருட்டி போடவும். பத்து நிமிடங்கள் ஆவியில் வேக விடவும்.
  • பிறகு பருப்பு வகைகளையும், மிளகாய், உப்பு, பெருங்காயத் தூள் போட்டு மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை போட்டு வெடித்தவுடன் அரைத்து வைத்துள்ள பருப்பு வகையை அதனுடன் சேர்த்து உதிரி உதிரியாக வரும் வரை வதக்கவும்.
  • பிறகு கொழுக்கட்டையை(சிறிது சிறிதாக உருட்டி வேகவைத்த உருண்டையை) அதனுடன் கலந்து நன்கு கிளறி 5 நிமிடம் கழித்து இறக்கவும்.

Thursday, March 24, 2005

நெல்லிக்காய் சாதம்

தேவையானப் பொருட்கள்

நெல்லிக்காய் - கால் கிலோ சிறியது
அரிசி - அரை கிலோ
பச்சைமிளகாய் - 8
நல்லெண்ணெய் - 100 கிராம்
ஆயில் - 150 கிராம்
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு தேக்கரண்டி
கடுகு - தாளிப்பதற்கு
கடலைப்பருப்பு - தாளிப்பதற்கு
இஞ்சி - தாளிப்பதற்கு
கறிவேப்பிலை - தாளிப்பதற்கு
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை

  • நெல்லிக்காய்களைக் கழுவி விதைகளை நீக்கி விட்டு அரைத்து கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, பெருங்காயம், மஞ்சள் தூள், இஞ்சி, பச்சைமிளகாய் தாளித்து அத்துடன் அரைத்த நெல்லிக்காய் விழுதை கலந்து உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • வதங்கியவுடன் வெந்தயத்தை இலேசாக வறுத்து பொடி பண்ணி போடவும்.
  • சாதத்தை சரியான பதத்தில் வடித்து நல்லெண்ணெய் சேர்த்து ஆறவிடவும்.
  • ஆறியவுடன் நெல்லிக்காய் மசாலாவை சேர்த்து கிளற வேண்டும்.

Wednesday, March 23, 2005

சாக்கோநட்

தேவையானப் பொருட்கள்

மேரி பிஸ்கெட் - 15
முந்திரி - அரை கப்
திராட்சை - அரை கப்
அக்ரூட் - அரை கப்
பாதாம் - அரை கப்
வெண்ணெய் - கால் கப்
கோக்கோ பவுடர் - ஒரு மேசைக்கரண்டி
மில்க் மெய்ட் - கால் கப்
சர்க்கரை - 2 மேசைக்கரண்டி

செய்முறை

  • பிஸ்கெட்டை நன்கு பொடி செய்து கொள்ளவும். முந்திரி, பாதாம், அக்ரூட்டை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பிஸ்கெட் தூளுடன் திராட்சை, கோக்கோ பௌடர், சர்க்கரை நறுக்கிய பருப்புகள் சேர்த்து மில்க் மெய்டையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • வெண்ணெயை உருக்கி சூடாக பிஸ்கட் கலவையில் சேர்த்துப் பிசையவும்.
  • அதை இரண்டு, மூன்று பகுதிகளாக பிரித்து சற்று கனமாக நீளவாக்கில் உருட்டி ஃபிரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து ஸ்லைஸ் செய்து பரிமாறவும்.

Tuesday, March 22, 2005

கோதுமை அடை

ஒரு கப் கோதுமை மாவு, ஒரு கரண்டி அரிசி மாவு, கொஞ்சம் நறுக்கின வெங்காயம், கொஞ்சம் உப்பு எல்லாத்தையும் கொஞ்சம் தண்ணி விட்டு கலந்து, தோசையா ஊத்தி எடுத்து, இருக்கிற பொடி, ஜாம், சாஸ் னு அவசரத்துக்கு எதையாவது தொட்டுக்கிட்டு, பெரும்பாலும் வெறுமனே சாப்பிட்டுட்டு, ஆபிஸ்க்கு ஓட வசதியான bachelor food இந்த கோதுமை தோசை. அதையே கொஞ்சம் பொறுமையா இந்த மாதிரி செஞ்சா இன்னும் ருசியா சாப்பிடலாம்.

தேவையானப் பொருட்கள்


சம்பாகோதுமை குருணை - 200 கிராம்
கோதுமை மாவு - 100 கிராம்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
சோம்புத்தூள் - 2 தேக்கரண்டி
பூண்டு - 5 பல்
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
முருங்கைக்கீரை - சிறு கைப்பிடி அளவு
உப்பு - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 100 மில்லி


செய்முறை


  • கோதுமை குருணையை அரை லிட்டர் தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
  • வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பூண்டு, இஞ்சியை தட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • ஊறிய கோதுமை ரவையுடன் கோதுமை மாவையும் நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
  • அத்துடன் மிளகாய்த்தூள், சோம்புத்தூள், இஞ்சி, பூண்டு, உப்பு, முருங்கைக்கீரை அனைத்தையும் நன்கு கலந்து அடை வார்க்கும் பக்குவத்தில் கரைத்துக் கொள்ள வேண்டும்.
  • தோசைக்கல்லை அடுப்பில் வைத்து கல் சூடானவுடன், ஒரு கரண்டி மாவை ஊற்றி பரப்பி விட வேண்டும். ஓரத்திலும் நடுவிலும் அரை தேக்கரண்டி எண்ணெயை ஊற்றி விட வேண்டும்.
  • 2 நிமிடம் கழித்து திருப்பிப் போட வேண்டும். வெந்த பிறகு எடுத்து விடலாம்.
  • முருங்கைக்கீரைக்கு பதிலாகக் கறிவேப்பிலை போட்டுக் கொள்ளலாம். தேங்காய்த் துருவலையும் சேர்த்துக் கொள்ளலாம்.

Monday, March 21, 2005

புறாக் குஞ்சு ரோஸ்ட்

சமையல் போட்டியில் எல்லோர் கவனத்தையும் ஈர்த்த பதார்த்தம் இது. புகைப்படம் எடுப்பதற்குள் காணாமல் போய்விட்டது. மிஞ்சியது சில எலும்பு துண்டுகள் மட்டும்தான். [என்னதான் இருந்தாலும் ஒரு சமையல் போட்டிக்காக இரண்டு சமாதானப் பறவைகளை சம்ஹாரம் பண்ணியது ரொம்ப பாவம்ங்க] கொ.பா.தி.போ.

தேவையானப் பொருட்கள்

புறாக் குஞ்சு - 2
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 5
பூண்டு - 3 பல்
தேங்காய் - ஒரு மூடி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மிளகு - 5
பட்டை - ஒரு துண்டு
இஞ்சி - சிறுதுண்டு
பெரிய சீரகம் - ஒரு தேக்கரண்டி
எலுமிச்சைபழம் - அரை பழம்
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
வெங்காயம் - 50 கிராம்

செய்முறை

  • இரண்டு புறாக்குஞ்சுகளை சுத்தம் செய்து வயிற்று பாகத்தில் கீறி, குடல் மற்றும் தேவையில்லாத பாகங்களை எடுத்துவிட்டு முழு புறாவாக வைத்துக் கொள்ளவும்.
  • மிளகாய் வற்றல், சீரகம், மிளகு பெருஞ்சீரகம், பட்டை ஒரு துண்டு, இஞ்சி சிறிது துண்டு, பூண்டு, தேங்காய் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
  • அரைத்த விழுது, உப்புத்தூள், மஞ்சள்தூள் சேர்த்த எலும்மிச்சை சாறு இவற்றில் புறாவினை தோய்த்து, நன்கு பிரட்டி சிறிது நேரம் ஊற விடவும்.
  • வாணலியில் வெண்ணெய், எண்ணெய் இரண்டையும் சேர்த்து ஊற்றி வெங்காயம் வெட்டிப் போட்டு கறியையும் சேர்த்து வதக்கவும்.
  • சற்று வதங்கியவுடன் சிறிது தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து வேகவிடவும்.
  • சிறிது நேரம் வேக வைத்து பின் 100 மில்லி கெட்டியான தேங்காய் பால் ஊற்றி சீறு தீயில் வேக வைக்கவும்.
  • கறி நன்றாக வெந்து சிவந்த நிறமாக எண்ணெய் தெளிந்து புரட்டினாற் போல் வந்ததும் இறக்கி வைக்கவும்.

Sunday, March 20, 2005

கொண்டைக்கடலை வடை

கொண்டைக்கடலை வடைங்கிற பேரு ரொம்ப சாதாரணமா இருந்துச்சுன்னா 'சன்னா வெஜ் பால்ஸ்' ன்னு பேரை மாத்தி செஞ்சு பார்த்துடுங்க. பேரை மாத்தினாலும் ருசி மாறப்போறது இல்லை. உள்ளே வாழைப்பூ எல்லாம் சேர்த்து இருக்காங்க. சத்தான சமாச்சாரம் போல இருக்கு. கொடுத்து உதவிய P.பானுமதிக்கு நன்றி.

தேவையானப் பொருட்கள்

கொண்டக்கடலை - கால் கிலோ
கடலைப்பருப்பு - 100 கிராம்
வாழைப்பூ=ஒன்று
பெரிய வெங்காயம் - 2
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பச்சைமிளகாய் - 4
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - அரை லிட்டர்

செய்முறை

  • கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊறவைத்து விடவும். கடலைப்பருப்பையும் சிறிது நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளலாம்.
  • அதன்பின் கொண்டைக்கடலை, கடலைப்பருப்பு, இஞ்சி, பச்சைமிளகாய் ஆகியவற்றை தேவையான உப்பு சேர்த்து மசால்வடைக்கு அரைப்பது போல் அரைத்து எடுக்கவும்.
  • வாழைப்பூவை பொடியாக நறுக்கி மோரில் ஊறவைத்து கொள்ளவும்.
  • அதன்பின் அதை அரைத்து வைத்துள்ள மாவுடன் சேர்த்து கிளறிக் கொள்ளவும்.
  • அத்துடன் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை கலந்து கொள்ளவும்.
  • பிறகு அடுப்பில் வாணலியில் வைத்து அதில் எண்ணெய்யை ஊற்றவும்.
  • எண்ணெய் காய்ந்தவுடன் அரைத்த மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி அதை மசால் வடை போல் தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
  • இப்பொழுது சூடான கொண்டைக்கடலை வடை தயார்.

Saturday, March 19, 2005

அவல் கேசரி

ரவை கேசரியைவிட சற்று வித்தியாசமான சுவை. செய்வதற்கு எளிதானது.

தேவையானப் பொருட்கள்

அவல் - அரை கிலோ
சர்க்கரை - 400 கிராம்
முந்திரி - 20
திராட்சை - 20
நெய் - 100 கிராம்
ஏலக்காய் - 5
குங்குமப்பூ - ஒரு தேக்கரண்டி
கேசரிபவுடர் - ஒரு சிட்டிகை

செய்முறை

  • அவலை சுத்தம் செய்து கொள்ளவும். வாணலியில் நெய் கொஞ்சம் விட்டு அவலை சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
  • பிறகு முந்திரி, திராட்சை, ஏலக்காயை பொடி செய்து நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு அதில் வறுத்த அவலை போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும்.
  • பிறகு சர்க்கரையை பாகு காய்ச்சி அதில் அவலை போட்டு வேக விடவும்.
  • நெய்யில் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை, ஏலக்காயைப் நெய்யுடன் ஊற்றிக் கிளறி வேகவிடவும்.
  • பிறகு அதில் கேசரிபவுடர் கரைத்த நீர், குங்குமப்பூ சேர்த்து கிளறி இறக்கவும்.

Friday, March 18, 2005

ராகி கேரட் போளி

கேழ்வரகு ன்னு சொல்லிகிட்டு இருந்தப்ப இருந்த மதிப்பைவிட இப்ப ராகி ன்னு சொல்றப்ப அதிமான மாதிரி தெரியுது. கொஞ்ச கால இடைவெளிக்கு அப்புறம் மக்கள் மறுபடியும் 'ராகி' பக்கம் திரும்பியிருக்காங்க. இப்பல்லாம் ராகி நல்லா சேல்ஸ் ஆகுதுன்னு நிறைய பேர் சொல்றாங்க. என்ன பேர் சொல்லி கூப்பிட்டா என்னங்க.. சத்தான உணவை சாப்பிட்டா சரி.


தேவையான பொருட்கள்

ராகி - அரை கிலோ
கோதுமை - ஒரு கப்
பொட்டுக்கடலை - ஒரு கப்
வெல்லம் - 200 கிராம்
கேரட் - 3
தேங்காய் - ஒரு மூடி
ஏலக்காய் - 6
நெய் - 200 கிராம்
கேரட் - 100 கிராம்

செய்முறை

  • ராகியை சுத்தம் செய்து 8 மணி நேரம் ஊறவைத்து வடித்து உலர்த்தி வாணலியில் போட்டு வறுக்கவும்.
  • கோதுமையையும் சுத்தம் செய்து வாணலியில் வறுக்கவும்.
  • வறுத்த ராகி, கோதுமை, பொட்டுக்கடலை மூன்றையும் கலந்து மிஷினில் அரைக்கவும்.
  • கேரட்டைக் கழுவி துருவிக் கொள்ளவும். அடுப்பில் அடி கனமான பாத்திரத்தை வைத்து அரை டம்ளர் தண்ணீர் விட்டு கேரட் துருவல் போட்டு வேக விடவும்.
  • மற்றொரு பாத்திரத்தில் கால் கப் தண்ணீர் விட்டு வெல்லம் போட்டு கொதித்து அதை வடிகட்டி அதை கேரட் வெந்ததில் போட்டு, தேங்காய் துருவல், ஏலக்காய் போட்டு இறக்கவும்.
  • அரைத்து வைத்துள்ள மாவை பாகில் போட்டு கைவிடாமல் கிளறவும்.
  • 10 நிமிடம் மூடிவைத்து ஆறியதும் வாழை இலை அல்லது ஒரு ப்ளாஸ்டிக் பேப்பரில் நெய் தடவி மாவை சிறிய உருண்டைகளாக வைத்து போளியாக தட்டவும்.
  • தோசை கல்லை அடுப்பில் போட்டு நெய் விட்டு போளியை போட்டு பொன்னிறமாக எடுக்கவும்.
  • இந்த இனிப்பை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். கேரட்டும் சேர்த்து இருப்பதால் சத்துகள் இருக்கின்றன.

Thursday, March 17, 2005

கேப்ஸிகம் பாத்

குடைமிளகாய் சாதம்னு சொன்னா குழந்தைங்க சாப்பிடாதோ என்னவோ?! சாப்பாட்டுக்குகூட தமிழைத் தவிர்த்து வேற மொழியில பேரு வச்சாதான் உள்ளே போகும் போல இருக்கு.. ஹீம்.

தேவையானப் பொருட்கள்

குடமிளகாய் - கால் கிலோ
அரிசி - அரை கிலோ
தனியா - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
தேங்காய்த்துருவல் - ஒரு தேக்கரண்டி
கிராம்பு - 2
ஏலக்காய் - ஒன்று
பட்டை - சிறிய துண்டு
மிளகாய் வற்றல் - 2
காரட் - ஒன்று
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை

  • முதலில் குடைமிளகாயை விதை நீக்கி பொடியாக அரிந்து கொள்ளவும்.
  • தனியா, சீரகம், மிளகு, கிராம்பு, ஏலக்காய், பட்டை, மிளகாய் வற்றல் ஆகியவற்றை வாணலியில் எண்ணெய் விடாமல் நன்கு வறுத்து ஆறியவுடன் மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி, குடை மிளகாயை அலம்பி பொடியாக நறுக்கிப் போட்டு வதக்கவும்.
  • பிறகு தீயைச் சிறிதாக வைத்துக் கொண்டு மிளகாய் வேகும் வரை தட்டால் மூடி வேகவிடவும்.
  • அவ்வபோது திறந்து பார்த்து கிளறிவிட வேண்டும். கடைசியில் பொடி செய்த மசாலா மற்றும் உப்பு போட்டு அடுப்பை அணைத்து விடவும்.
  • அரிசியை நன்கு களைந்து நீரை வடிய விட்டு இலேசாக நெய் அல்லது எண்ணெய் விட்டு வறுத்து ஒரு பங்கு அரிசிக்கு 2 பங்கு தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
  • அரிசி வெந்தவுடன் செய்து வைத்துள்ள குடமிளகாய் மசாலாவைப் போட்டு தேவையான உப்பு போட்டு நெய் ஊற்றி கலந்து வைத்து 5 நிமிடம் கழித்து சாப்பிடவும்.
  • துருவிய காரட்டை மேலே தூவி அலங்காரம் செய்யலாம். இந்த குடைமிளகாய் சாதத்திற்கு வெங்காயம், பூண்டு சேர்க்க கூடாது. ஏனென்றால் குடமிளகாயில் உள்ள வாசனை வெங்காயம், பூண்டு சேர்த்தால் தெரியாது.

Wednesday, March 16, 2005

கமலா பழத்தோல் பூண்டு குழம்பு

அடுத்த முறை கமலாப்பழம் வாங்கி சாப்பிட்ட பிறகு தோலைத் தூக்கி எறிஞ்சுடாதீங்க.. அதை இப்படி குழம்பாக்கி சாப்பிட்டுப் பாருங்க. அப்புறம் தோலுக்காகவே பழம் வாங்க ஆரம்பிச்சுடுவீங்க. குழம்புகள் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்ற குழம்பு இது.

தேவையானப் பொருட்கள்

கமலா பழத்தோல் - ஒரு கப்(பொடியாக அரிந்தது)
வெங்காயம் - 2
பூண்டு - 10 பல்
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
புளி - எலுமிச்சை அளவு
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
கடுகு - அரைத்தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
வெல்லம் - நெல்லிக்காய் அளவு
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை


  • முதலில் நல்ல கமலா பழங்களை தேர்ந்தெடுத்து தோல்களை பொடியாக அரிந்து கொள்ளவும்.
  • பூண்டு, வெங்காயம் ஆகியவற்றையும் தோலுரித்துப் பொடியாக அரிந்து கொள்ளவும். புளியை கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கி அதில் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • பின் அதில் பொடியாக அரிந்த வெங்காயம், பூண்டு போட்டு நன்கு சிவக்க வதக்கவும்.
  • அதன் பின் பழத்தோல்களை போட்டு நன்கு கிளறி விட்டு அடுப்பை நிதானமாக எரியவிட்டு தோல் மென்மையாகும் வரை கிளறிவிட்டு வதக்கவும். (அப்போது தான் அதில் உள்ள கார்ப்பு சுவை போகும்).
  • நன்கு வதங்கியதும் புளிக்கரைசலை கொட்டி 5 நிமிடம் வேக விடவும். இக்கலவையில் மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள், வெல்லம் போட்டு நன்கு கலக்கவும்.
  • வெல்லம் கரைந்தவுடன் இறக்கி விடவும். சுவையான பழத்தோல் குழம்பு ரெடி.
  • இது வயதானவர்களுக்கு நன்கு ஜீரணசக்தியை கொடுக்கும் மருத்துவ குணம் கொண்ட குழம்பு. இதை இரண்டு நாட்கள் வைத்து இருந்து சாப்பிடலாம்.

Tuesday, March 15, 2005

பால் வாழைக்காய் குழம்பு

அறுசுவை சமையல் போட்டியில் அமோக மதிப்பெண்களைப் பெற்று குழம்புகள் பிரிவில் முதலிடம் பெற்ற குழம்பு இது. சமைத்து, ருசித்துப் பாருங்கள்.


தேவையானப் பொருட்கள்

தேங்காய் - 2
வாழைக்காய் - 2
பட்டை மிளகாய் - 5
மிளகு - 3 தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 50 கிராம்
நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை

  • தேங்காயை அரைத்து 4 டம்ளர் பால் எடுத்துக் கொள்ளவும்.
  • பட்டை மிளகாய், மிளகு, சீரகம், சின்ன வெங்காயம் இவற்றை அம்மியில் வைத்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  • பிறகு வாழைக்காயை தோல் உறித்து குண்டு குண்டாக நறுக்கி உப்பு, மஞ்சள் தூள் போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • அரைத்து வைத்துள்ள விழுதினை தேங்காய் பாலில் கரைத்து ஒரு பாத்திரத்தில் இட்டு வேகவிடவும்.
  • உப்பு போட்டு குழம்பு நன்றாக கொதித்தப் பிறகு வேக வைத்து எடுத்துள்ள வாழைக்காயை போட்டு சுண்ட கொதிக்க வைக்கவும்.
  • ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய்யில் கடுகு தாளித்து கொட்டவும். மீதி எண்ணெயை அப்படியே ஊற்றி சிறிது நேரத்தில் இறக்கவும்.

Monday, March 14, 2005

தானிய புலாவ்

அறுசுவை சமையல் போட்டியில் சிறப்பு உணவுப் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்ற புலாவ் இது. ருசியானது & சத்தானது.

தேவையான பொருட்கள்

பொரி அரிசி - 250 மில்லி
பச்சைபயறு - 100 மில்லி
முழு கருப்பு உளுந்து - 100 மில்லி
கோதுமை - 100 மில்லி
கொண்டைக்கடலை - 50 மில்லி
தேங்காய் - ஒரு கப் துருவியது
காராமணி பயிர் - 50 மில்லி
எண்ணெய் - சிறிதளவு தாளிக்க
மிளகாய் வற்றல் - 4
உளுத்தம் பருப்பு - அரைத்தேக்கரண்டி
கடுகு - அரைத்தேக்கரண்டி
பெருங்காயம் - 2 சிட்டிகை
கடலைப்பருப்பு - அரைத்தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை

  • பயிறு, உளுந்து, கோதுமை, கொண்டைக்கடலை ஆகியவற்றை வாணலியில் போட்டு நன்றாக வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.
  • பின் இவற்றுடன் பொரி அரிசியையும் கலந்து கொள்ள வேண்டும்.
  • இந்த தானியங்களின் கலவையில் அரை லிட்டர் தண்ணீர் மற்றும் தேவையான உப்பு சேர்த்து குக்கரில் வைத்து வேகவிடவும்.
  • இரண்டு விசில் வந்ததும் வெளியில் எடுத்து வடிகட்டி கொள்ள வேண்டும்.
  • அடுப்பில் கடாய் ஏற்றி அதில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, பெருங்காயம், மிளகாய், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து நன்கு பிரட்டவும்.
  • பிறகு தானியகலவையை அதில் போட்டு நன்றாக கிளற வேண்டும்.
  • அதன் பின்பு தேங்காய்த் துருவலை போட்டு மீண்டும் நன்றாக கிளறி இறக்கி விட வேண்டும்.
  • இதனை இளஞ்சூட்டுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

Sunday, March 13, 2005

ஜவ்வரிசி புலாவ்

சமீபத்தில் அறுசுவை நடத்திய சமையல் போட்டியில், சிறப்பு உணவு வகைப் பிரிவில் முதல் பரிசு பெற்ற உணவு இது.

தேவையான பொருட்கள்

நைலான் ஜவ்வரிசி - 250 கிராம்
பாசிப்பருப்பு - 250 கிராம்
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
முந்திரி - 5
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
தேங்காய் - ஒரு மூடி துருவியது
பச்சைமிளகாய் - 5
உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி

செய்முறை

  • ஜவ்வரிசியுடன் மஞ்சள் தூள் கலந்து மூன்று மணி நேரம் தண்ணீரில் முழ்கும் படி ஊற வைக்க வேண்டும்.
  • பாசிப்பருப்பை அரைவேக்காடு வேகவைத்து வடிகட்டி வைக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரி, பச்சைமிளகாய் இவை அனைத்தையும் போட்டு வதக்கவும்.
  • அவை வதங்கியபின் ஊறிய ஜவ்வரிசி, வெந்த பருப்பு போட்டு 5 நிமிடம் கிளறவும்.
  • கடைசியில் தேங்காய் துருவல் போட்டு கிளறி இறக்கவும்.

Saturday, March 12, 2005

ரவை சர்க்கரை பொங்கல்

ரவாவில உப்புமா, கேசரி மட்டுமில்ல, பொங்கல் கூட செய்யலாம்னு சொல்றாங்க திருமதி. டி. விஜயலெட்சுமி. எப்படின்னு பார்ப்போம்.

தேவையானப் பொருட்கள்:

ரவா - கால் கிலோ
வெல்லம் - கால் கிலோ
முந்திரி பருப்பு - 25 கிராம்
திராட்சை - 10 கிராம்
ஏலக்காய் - 5
நெய் - 100 கிராம்
உப்பு - ஒரு சிட்டிகை
டால்டா - 50 கிராம்

செய்முறை:

  • சுத்தம் செய்த ரவாவை லேசாக டால்டா விட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் ரவாவின் அளவிற்கு இருமடங்கு தண்ணீர் ஊற்றி, வறுத்த ரவாவினையும் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
  • அதில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து , வெல்லத்தை சீவி எடுத்துக் கொண்டு, கொதிக்கும் தண்ணீரில் கொஞ்சம் கொஞ்சமாக போடவும்.
  • வெல்லத்தைப் போட்டு கெட்டியாக வரும் வரை நன்கு கிளறவும்.
  • நெய்யில் முந்திரி, ஏலக்காய், திராட்சை ஆகியவற்றைப் பொரித்து எடுத்து ரவா சர்க்கரைப் பொங்கலில் போடவும்.

Friday, March 11, 2005

பலாப்பழ கட்லெட்

பலாப்பழ சீசன் ஆரம்பமாயிடுச்சு. வெறும் சுளையாவே எத்தனை நாளைக்குத்தான் சாப்பிடுறது. கொஞ்சம் வித்தியாசமா இந்த மாதிரி கட்லெட்டா செஞ்சு சாப்பிட்டுப் பாருங்க. அப்புறம் எப்படி இருக்குன்னு சொல்லுங்க. உபயம்: திருமதி. என். ரேவதி, நாகப்பட்டினம்.

தேவையானப் பொருட்கள்

பலாப்பழச் சுளைகள் - 20
சர்க்கரைவள்ளிக்கிழங்கு - 4
சர்க்கரை - 100 கிராம்
பிரட் - 5 துண்டுகள்
பிரட் தூள் - ஒரு கப்
பால் - ஒரு டம்ளர்
ஏலக்காய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
நெய் - ஒரு மேசைக்கரண்டி

செய்முறை

  • சர்க்கரைவள்ளிக்கிழங்கை வேகவைத்து தோல், நார் நீக்கி நன்றாக உதிர்க்கவும்.
  • பிரட்டை பாலில் ஊறவைத்து நன்றாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
  • பலாச்சுளைகளை நறுக்கி போட்டு மிக்ஸியில் நன்கு அரைக்கவும்.
  • சர்க்கரையைப் பாகு காய்ச்சி அதில் உதிர்த்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பிசைந்த பிரட்டு, ஏலக்காய் தூள், பலாப்பழக்கூழ் சேர்த்து 10 நிமிடம் கிளறவும்.
  • அந்த கலவையை நன்றாகப் பிசைந்து வடை போல் தட்டி, பிரட்டு தூளில் அதைப்புரட்டி நெய் தடவி தோசைக்கல்லில் பரப்பவும்.
  • வெந்தவுடன் திருப்பிப்போட்டு பொன்னிறமானதும் எடுத்து விடவும்.
  • இது ஒரு இனிப்பான கட்லட்.