![]() எங்களது திருமணத்திற்கு தொலைபேசியிலும், மின்னஞ்சல் மூலமாகவும், மன்றம் மூலமாகவும் வாழ்த்துக்கள் தெரிவித்த சகோதரிகள் அனைவருக்கும் மிக்க நன்றி. நடந்த கதையை முழுமையாக இங்கே சொல்ல இயலாததால், ஆவலுடன் கேட்ட கர்ப்பிணி சகோதரிக்கு எனது இயலாமையை மட்டும் இங்கே தெரிவித்துக்கொள்கின்றேன். எனது திருமணம் மிகக்குறுகிய காலத்தில் எடுத்த முடிவு. யாருமே எதிர்பாராத வண்ணம், எல்லாமே மிக விரைவாக நிகழ்வுற்றது. எங்கள் இருவருக்குமே நடந்தவை அனைத்தும் கனவு போல் இருக்கின்றது. ஆரம்பக்கால சோதனைகள் முடிந்து, இனி நல்லவை மட்டுமே நடக்கும் என்ற எதிர்ப்பார்ப்புடன் எங்கள் திருமண வாழ்க்கையை தொடங்குகின்றோம். அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானாம் என்ற பழமொழியைக் குறிப்பிட்டு, புதுப்பெண்டாட்டியுடன் போதும் உல்லாசம் என்பதுபோல் அறிவுறுத்தி மின்னஞ்சல் அனுப்பியிருந்த சகோதரிக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்பும் தகவல் இதுதான். நீங்கள் நினைப்பதுபோல், இங்கே நான் கடமை மறந்து, உல்லாசமாக பொழுதை கழித்துக் கொண்டு, மகிழ்ச்சியாக நாட்களை ஓட்டிக்கொண்டிருக்கவில்லை. எனது நிலையை வெளியில் சொல்ல முடியவில்லை. நான் சந்தித்து வரும் பிரச்சனைகள், அதனால் உண்டாகும் மன உளைச்சல்கள் எல்லாம் சேர்ந்து என்னை அறுசுவைக்கு பணியாற்ற முடியாமல் செய்துவிட்டன. பிரச்சனைகளை பேசுவது, சமாளிப்பது, எதிர்கொள்வது என்பதிலேயே பொழுதுகள் கழிந்து கொண்டிருந்தன. இதனால்தான் நான் குறிப்பிட்டவாறு என்னால் அறுசுவையில் மாற்றங்கள் கொண்டு வர முடியவில்லை. இதற்காக மன்னிப்பு கோருகின்றேன். பிரச்சனைகள் எனக்கு மட்டும் என்றில்லாமல், அறுசுவையில் பணியாற்றுபவர்களுக்கும் இருந்த காரணத்தால், அறுசுவை பணிகள் மொத்தமாக பாதிக்கப்பட்டது. தற்போது பழைய நிலைக்கு திரும்பியுள்ளோம். விரைவில் அறுசுவைக்கு புதிய பொலிவைக் கொடுக்கும் முயற்சியில் இறங்குவோம். எனக்கு தனிமின்னஞ்சல்கள் நிறைய வந்திருக்கின்றன. என்னால் யாருக்கும் பதில் கொடுக்க முடியவில்லை. இயன்ற அளவிற்கு கொடுக்க முயற்சிக்கின்றேன். தற்போது எனது மெயில் சர்வரை செயல் இழக்கச்செய்திருப்பதால், உடனே பதில் கொடுத்தல் சிரமம். விரைவில் அதனை சரிசெய்து அனைவருக்கும் பதில் கொடுக்கின்றேன். திருமணப் படங்களை வெளியிடச்சொல்லி நிறைய சகோதரிகள் கேட்டிருந்தனர். எங்களது திருமணம் கோயிலில் நடைபெற்றது என்பதால் படங்கள் அதிகம் எடுக்கவில்லை. எடுத்த படங்களை மீண்டும் டிஜிட்டல் கேமராவில் எடுத்து, கீழ்க்கண்ட லிங்க்கில் சில படங்களை கொடுத்துள்ளேன். படங்களின் தரம் மோசமாக இருக்கும். கோபித்துக்கொள்ள வேண்டாம். சரி, இப்போது முக்கியமான விசயத்திற்கு வருகின்றேன். எனது திருமணம் நான் உட்பட யாருமே எதிர்பாராத வண்ணம், திடீரென நடைபெற்றுவிட்டது. யாருக்கும் அழைப்பு கொடுக்க இயலவில்லை. அதனால் திருமண வரவேற்பினை அழைப்பு கொடுத்து கொண்டாட முடிவு செய்துள்ளோம். இப்போதுதான் தேதியை முடிவு செய்தோம். வரும் ஜனவரி 13 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை நாகையில் வரவேற்பு விழா நடைபெறவுள்ளது. இது ஒரு முன் தகவல். முறையான அழைப்பினை அழைப்பிதழ் தயாரான பின்பு இங்கே கொடுக்கின்றேன். சகோதர சகோதரிகள் அனைவரும் நாகை பயணத்திற்கு தயார் செய்துகொள்ளவும். வரவேற்பின்போது இரவு விருந்தினை வித்தியாசமாக கொடுக்க நிறைய திட்டங்கள் போட்டு வருகின்றோம். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பாய் இருக்கும் உணவுகள் பலவற்றை அங்கிருந்து வரவழைக்கவுள்ளோம். உதாரணமாக, திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா, ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா, சாத்தூர் சேவு, தூத்துக்குடி மக்ரூன், கோவில்பட்டி கடலைமிட்டாய்.. இப்படி தென் தமிழக சிறப்பு பலகாரங்களை கொண்டு வர ஏற்பாடுகள் செய்துள்ளோம். வேறு என்னவெல்லாம் கொடுக்கலாம், என்ன மாதிரி மெனு வைக்கலாம் என்பதற்கு உங்களின் ஆலோசனைகளை வாரி வழங்குங்கள். மற்ற தகவல்களை பின்னர் தெரிவிக்கின்றேன். மீண்டும் எனது நன்றிகள் :-) டிசம்பர் 27, 2007 - 7:51am - வழங்கியவர் admin
|

