![]() இன்று காலை கலைஞர் தொலைக்காட்சியில் தசாவதாரம் ஒலிநாடா வெளியீட்டு விழா நிகழ்ச்சியின் தொகுப்பினை காட்டினார்கள். விழாவினை காண்பித்த நேரத்தைவிட அதிகநேரம் விளம்பரங்களை காண்பித்தார்கள். ஒவ்வொரு இடைவெளியிலும் இரண்டு முறை வெளியான அந்த 10 விளம்பரங்களும் எனக்கு மனப்பாடம் ஆகிவிட்டது. அவ்வபோது விஜய் டிவிக்கு மாறி வான் டேமி படத்தை பத்தாவது முறையாக பார்த்து ரசித்தாலும், அங்கே எதாவது முக்கிய காட்சிகள் போய்விடுமோ என்ற பயத்தில் சானலை மாற்றி மாற்றி பார்த்தது சுவாரஸ்யமான அவஸ்தை. இரண்டு வருடங்களாக தயாரிக்கப்பட்டுவரும் இந்த படம் ஏற்கனவே ஏராளமான எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. இப்படி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வெளிவந்த முந்தைய கமல் படங்கள் சில எந்த மாதிரி வரவேற்பை மக்களிடம் பெற்றது என்பதை இப்போது நினைத்துப் பார்க்கையில் கொஞ்சம் பயமாக இருக்கிறது. நான் தீவிர கமல் ரசிகன் என்று சொல்லிக்கொள்பவன் அல்ல. ஆனால் கமலை தீவிரமாக ரசிப்பவன் :-) அவருடைய உழைப்பிற்கு சில நேரங்களில் பலன் இல்லாமல் போகும்போது, அந்த நல்ல கலைஞன் துவண்டுவிடக்கூடாதே என்று உண்மையாக வருத்தப்படுபவன். இந்த படத்தின் ட்ரெயிலர் பார்த்ததில் இருந்து அதன் ஞாபகமாகவே இருக்கின்றது. என்னால் இன்று வேறு வேலைகள் பார்க்க முடியாததால் இந்த பதிவை கொடுக்கின்றேன்:-) ஜாக்கி சான்னை முக்கிய விருந்தாளியாக அழைத்திருந்தார்கள். ஜாக்கி சானை பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அவர் படங்களில் சண்டை மட்டுமில்லாமல் நல்ல நகைச்சுவையும் இருக்கும். பலநேரங்களில் சண்டையே நகைச்சுவையாய் இருக்கும். மிகவும் எளிமையாக வந்து அமர்ந்திருந்தார். முகத்தில் கடைசி வரை அதே குழந்தைத்தனமான புன்னகை. எல்லோர் பேச்சுக்கும் கைதட்டி கொண்டிருந்தார். கூட்டம் கமலஹாசன் பெயரைச் சொல்லும்போதெல்லாம் கைத்தட்ட, இவரும் தட்டிக்கொண்டிருந்தார். மேடையில் நடந்த இன்னொரு சுவாரஸ்மான விசயம் அந்த குள்ள மனிதரின் உயர்ந்த உள்ளத்தை வெளிக்காட்டியது. கேசட் வெளியீட்டின் போது, கேசட் முகப்பு படத்தை ஒரு பெரிய அட்டையில் கொண்டு வந்து அதை கலைஞர் அவர்களிடம் கொடுத்தார்கள். அந்த அட்டையை ஒரு காக்கி பேப்பரை கொண்டு சுற்றி மறைத்து, அதை ரிப்பனால் கட்டியிருந்தார்கள். சுற்றியிருந்த பேப்பரையும், ரிப்பனையும் பிரித்துவிட்டு, அந்த கேசட் முகப்பு அட்டையை வைத்து எல்லோரும் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தபின்பு அட்டையை மட்டும் எடுத்துக் கொண்டு செல்ல, அதை சுற்றி இருந்த காகிதமும் ரிப்பனும் கீழேயே கிடந்தது. சில நொடிகள்தான், ஜாக்கி சான் குனிந்து அவற்றை எடுத்துக்கொண்டு யாரிடம் கொடுப்பது என்று தெரியாமல் மேடையின் மறுபுறத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தார். மேடையில் இருந்த வேறு சிலர் இதை கவனித்தாலும் அதை அவர்கள் யாரும் வாங்கவில்லை. கடைசியில் கமல் அதைப்பார்த்துவிட்டு சட்டென அவர் கையில் இருந்து வாங்கி அதை யாரோ ஒருவரிடம் கொடுத்தார். அவர் கொடுத்த விதத்தில் அந்த பேப்பர் ரிப்பன் எல்லாம் கீழே விழுந்தது மட்டும் தெரிந்தது. நீங்கள் ஏன் இதை செய்கின்றீர்கள், போய் அமருங்கள் என்பதுபோல் ஏதோ ஜாக்கி சானிடம் சொன்னார். அவர் ரிப்பனையும் பேப்பரையும் எடுத்துக்கொண்டு சென்றபோது கூட்டம் ஆரவாரம் செய்தது. ஆனால், கூட்டம் ஆரவாரம் செய்யவேண்டும் என்பதற்காக அவர் இதனை செய்யவில்லை. இயல்பாய் இருந்த செயல் அது. அவர்கள் வளர்ந்த விதம் அப்படி என்பதை காட்டியது. நம்மவர்கள் எத்தனை பேர் இப்படி செய்திருப்பார்கள் என்று யோசிக்க வைத்தது. ஒரு தெருமுனை கூட்டத்திற்கு மேடை போட்டு ஏற்றி உட்கார வைத்தாலே, நாற்காலியில் சாய்வாக அமர்ந்து, கையை கன்னத்திற்கு கொடுத்து தாங்கிக் கொண்டு, ஏதோ உலகை மாற்ற என்ன செய்யலாம் என்பது போல் தீவிரமாக சிந்திக்கும் ஞானிகளாக காட்டிக்கொள்பவர்கள் எங்கே. சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு, யார் என்ன பேசுகின்றார்கள் என்பது தெரியாத போதிலும் கடைசி வரை புன்னகை மாறாமல், எல்லோருடன் கைத்தட்டி ரசித்து, மிகவும் இயல்பாய் இருந்த அந்த சூப்பர் ஹீரோ எங்கே.. இதைத்தான் நிறைகுடம் ததும்பாது என்பார்களோ.. இன்று எனக்கு ஜாக்கி சானை ரொம்பவே பிடித்து போய்விட்டது. இவ்வளவு பெரிய ஆடம்பர விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள், அங்கே பேசுபவர்கள் என்ன பேசுகின்றார்கள் என்பதை ஜாக்கி சானுக்கும், அமிதாப்புக்கும் மொழிபெயர்த்து சொல்ல ஒரு மொழிபெயர்ப்பாளரை ஏற்பாடு செய்திருக்க வேண்டும். ஜாக்கி சான் அவரது பெயர் உச்சரிக்கப்படும் போதெல்லாம் யாராவது மொழி பெயர்ப்பார்களா என்று சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டிருந்தார். அமிதாப்பும் என்ன நடக்கின்றது என்பது புரியாமல் ஒரே மாதிரி வெற்றுப் பார்வை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தார். கலைஞர் வழக்கம்போல் சில தகவல்களை திரட்டி வந்து மேடையில் படித்தார். கமலும் ஜாக்கி சானும் ஒரே வருடத்தில் பிறந்தவர்கள், இருவர் பிறந்த தேதியும் 7 என்பதை குறிப்பிட்டார். ஜாக்கி சான் பேசும்போது அமிதாப், கமல் உடன் நடிக்க விரும்புவதை தெரிவித்து, தசாவதாரம் படத்தைப் பற்றி சிம்பிளாக ஒரே வார்த்தையில் "வாவ்" என்றார். படத்தின் கதை என்னவென்று தெரியவில்லை. ராமனுஜராக 12 ஆம் நூற்றாண்டில் தொடங்கி, அவர், இவர்.. அமெரிக்க விஞ்ஞானி என்று 10 வேடங்களில் கமல் வருகின்றாராம். படத்தை சீக்கிரம் வெளிவிடுங்கள் என்று மேடையில் கமலை நோக்கி விஜய் வேண்டுகோள் வைத்தார். அதுதான் நல்லது என்று தோன்றுகின்றது. இதற்கு மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்தால், வெறுப்பு வந்துவிடும். பின்னர் படத்தின் சிறிய குறைகளும் பெரிதாக பேசப்படும். எது எப்படியோ, விரைவில் தமிழில் ஒரு பிரமாண்டமான படத்தை பார்க்கலாம் என்று தோன்றுகின்றது. அதுசரி, கமலின் நெருங்கிய நண்பர் ரஜினி அவர்களை விழாவிற்கு அழைக்கவில்லையே.. ஏன்? ஏப்ரல் 27, 2008 - 1:37pm - வழங்கியவர் babu
|

