நாஞ்சில் நாட்டு மீன் குழம்பு

வழங்கியவர் : kavisiva

தேதி : வெள்ளி, 11/12/2009 - 12:26

ஆயத்த நேரம் :

சமைக்கும் நேரம் :

பரிமாறும் அளவு :

4
2 votes
Your rating: None
 

 

  • மீன்(திருக்கை, வாளைமீன் தவிர) - 250 கிராம்
  • தேங்காய் துருவல் - 3/4 கப் (அதிகம் வேண்டாம் என்பவர்கள் அரை கப்)
  • சின்ன வெங்காயம் - 4 அல்லது 5
  • பச்சை மிளகாய் - 1 அல்லது 2
  • மிளகு - 3/4 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் - 1 முதல் 1 1/2 தேக்கரண்டி (காரத்திற்கேற்ப)
  • தனியா தூள் - 2 1/2 தேக்கரண்டி
  • மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
  • கறிவேப்பிலை - 2 கொத்து
  • புளி - சிறிய எலுமிச்சை அளவு
  • உப்பு - தேவையான அளவு

 

 

மீனை சுத்தம் செய்து தோலை நீக்கி விட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.

மிக்ஸியில் தேங்காய் துருவலுடன் சின்ன வெங்காயம், மிளகாய் தூள், தனியாதூள், மஞ்சள் தூள், மிளகு ஆகியவற்றை போட்டு தண்ணீர் ஊற்றி மையாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு புளிக்கரைசல், உப்பு சேர்த்து சுவைபார்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.

பாத்திரத்தில் (மண்சட்டியாக இருந்தால் சுவை கூடும்) மீனைப்போட்டு அதன் மீது மசாலா கரைசலை ஊற்றி கீறி வைத்திருக்கும் பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து 10 நிமிடம் தனியே வைக்கவும். (இப்படி செய்வதால் உப்பு மற்றும் காரம் மீன் துண்டுகளின் உள்ளேயும் பிடிக்கும்)

இந்த மீன் கலவையை எடுத்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். இடையிடையே பாத்திரத்தை சுழற்றி விடவும். கரண்டி போட்டு கிளறினால் மீன் உடைந்து விடும்.

நன்றாக கொதித்து பச்சை வாசனை போனதும் மூடி போட்டு தீயைக்குறைத்து வைத்து 3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.

சுவையான நாஞ்சில் நாட்டு மீன் குழம்பு தயார். இந்த குறிப்பினை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. கவிசிவா அவர்கள். நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை பகிர்ந்துக் கொள்ளவும்.

 

இக்குழம்பை நம் விருப்பத்திற்கேற்ப கெட்டியாகவோ அல்லது சிறிது நீர்த்தார் போலவோ செய்யலாம். அதற்கேற்ப காரம் மற்றும் புளியின் அளவை சேர்த்து செய்து கொள்ளவும். சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும். மீதம் வரும் குழம்பை அதே சட்டியில் வைத்து வற்றும் வரை சூடாக்கி அடுத்த நாள் பழைய சாதத்தில் உப்பு சேர்த்து தயிர் விட்டு பிசைந்து நடுவில் இக்குழம்பை வைத்து சாப்பிட்டால் அதன் சுவையே தனி.







கவி, நல்ல சமையல் குறிப்பு. அதிலும் ரசித்து சொல்லியிருப்பது இன்னும் அருமை.சமையல் கலை நிபுணர் திரு.தாமோதரன் நினைவிற்கு வருகிறார்.Save the Energy for the future generation

Save the Energy for the future generation

ஹாய் கவி..,எப்படி இருக்கீங்க?சுவையான குறிப்பை தந்து இருக்கீங்க...அதுவும் மண் சட்டியில்.ம்ம்..ஹா..ஹா..மணக்குது.
நானும் இப்படிதான் செய்வேன்.ஆனால் ஒரு வித்தியாசம் உண்டு.கரைத்து வைத்தவுடன்..எண்ணெய் ஊற்றி கரிவிடம் போட்டு தாளித்து பின் கரைசலை ஊற்றி கொதிக்க விடுவேன்.
தாங்கள் தாளிக்காததற்க்கு ஏதேனும் காரணம் உண்டா?இருந்தால் சொல்லுங்களேன்.(நானும் தெரிந்து கொள்ளலாம் அல்லவா...?)
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

இந்திரா அக்கா மிக நன்றி. பழையசோற்றைப்பற்றி சொன்னதும் திரு. தாமோதரன் அவர்கள் நினைவு வந்து விட்டதா :-). உண்மைதான் அவர் அப்படி சொல்லும் போதே நாவில் எச்சில் ஊறும் :-)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹாய் அப்சரா பின்னூட்டம் கொடுத்ததில் மிக்க மகிழ்ச்சி. நீங்களும் இப்படித்தான் செய்வீங்களா?
தாளிக்காததற்கு ஸ்பெஷல் காரணங்கள் இல்லை. எங்கள் ஊர்ப்பக்கம் பொதுவாகவே மீன் குழம்பு செய்யும் போது தாளிப்பதில்லை. மேலும் சாதாரண சமையலுக்கு கூட கருவடகம் தாளிக்க பயன்படுத்த மாட்டோம். கருவடகம்னா என்ன என்பதே எங்கள் ஊரில் பலருக்கு தெரியாது :-).
ஒருமுறை நீங்கள் செய்வது போல் தாளித்து செய்கிறேன். கருவடகம் வாங்கி வைத்திருக்கிறேன் :-)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவிசிவா முகப்பில் பெயரை பார்த்ததும் உஙக்ள் குறீப்பு தான் என்று தெரிந்து விட்டது. எண்ணையில்லாமல் டயட்டுக்கு ஏற்றது நானும் முன்பு ஒரு முறை செய்து இருகேன்ன் இதை ரொம்ப நல்ல இருந்தது.

Jaleela

ஜலீலாக்கா பெயரைப்பார்த்ததும் கண்டு பிடிச்சிட்டீங்களா? டயட்டுக்கு ஏற்றதுதான்(தேங்காயின் அளைவைக் குறைத்து கொஞ்சம் நீர்க்க வைத்தால் :-)

இன்னும் ஒரு டயட்டுக்கு ஏற்ற மீன் குழம்பு ரெசிப்பி ஃபோட்டோ இப்போதுதான் எடுத்து வைத்திருக்கிறேன். விரைவில் அனுப்பிவிடுகிறேன்.

அன்புடன்
கவிசிவா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!