இலங்கையில், பெரும்பாலும் வட புலத்தில் வேப்பம் பூ வடகம் பிரபலம். விரத நாட்களில் பெரும்பாலான வீடுகளில் மோர் மிளகாயும் வடகமும் மதிய உணவில் இடம் பெறும். வேப்பம் பூ காலங்களில் வேப்பமரத்தின் கீழ் பாய் விரித்து வேப்பம் பூ சேகரிப்பார்கள். அல்லது வீட்டிலுள்ள சின்ன தம்பிகளை மரத்தில் ஏற்றி வேப்பம் பூவை ஆய்வார்கள். பின்னர் அவற்றை கஞ்சல் குப்பை அகற்றி சுத்தமாகி காய வைத்து வடகம் செய்வார்கள்.
தேவையானப் பொருட்கள்
- காய வைத்த வேப்பம்பூ - 3 கப்
- உளுந்து - 1 கப்
- மிளகு - 1 தேக்கரண்டி
- பெரிய சீரகம் - 1 மேசைக்கரண்டி
- சிறிய சீரகம் - 1 மேசைக்கரண்டி
- வெட்டிய வெங்காயம் - 1/2 கப்
- கறிவேப்பிலை - 2 - 3 நெட்டு
- மிளகாய் பிளேக்ஸ் - 2 மேசைக்கரண்டி
- உப்பு
செய்முறை
- மிளகு, பெரிய, சிறிய சீரகங்களை பொடித்து கொள்ளவும்
- உழுந்தை 5- 6 மணித்தியாலங்கள் ஊற வைத்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- பின்னர் அரைத்த உளுந்தினுள் காய்ந்த வேப்பம் பூ மற்றும் ஏனைய பொருட்கள் அனைத்தையும் சேர்த்து தண்ணீர் விடாது இறுக்கமாக குழைக்கவும்.
- பின்னர் அதனை நெல்லிக்காயளவு உருண்டைகளாக உருட்டி சிறிது வடை போல தட்டையாக்கி சுத்தமான காய்ந்த ஒரு துணியில் (பொதுவாக தாத்தாவின் பழைய வேட்டி) அடுக்கி வெயிலில் நன்கு காய வைத்து எடுக்கவும்.
- வேப்பம்பூ வடகம் தயார். இதனை ஒரு சுத்தமான் காய்ந்த போத்தல் அல்லது டப்பாவினுள் போட்டு தேவையான போது எடுத்து எண்ணெயில் பொரித்து சோறு புட்டு போன்றவற்றுடன் சாப்பிடலாம். மிகவும் சுவையாக இருக்கும்.
குறிப்பு
இதற்கு வெங்காயத்தை நல்ல குறுணலாக வெட்ட வேண்டும். ஒரு வருடத்துக்கு மேல் வைத்து பாவிக்கலாம். பழுதாகாது. சுவையானது. வேப்பம் பூ ஆரோக்கியத்திற்கும் நல்லது. இதே முறையில் பாவற்காய், முருங்கைக்காய், வாழைப்பூ கொண்டும் வடகம் செய்யலாம்.