உள்நுழைதல்

வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

மைக்ரோஅவன் மஷ்ரூம் பிரியாணி



தேவையானப் பொருட்கள்

  • மொட்டுக் காளான் (அ) பால் காளான் - 15
  • (விருப்பமான) அரிசி - 2 கப்
  • பெரிய வெங்காயம் - 2
  • தக்காளி - 2
  • தயிர் - 1/2 கப்
  • பால் - 1/4 கப்
  • இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
  • பட்டை - சிறிது
  • கிராம்பு - 3
  • ஏலக்காய் - 2
  • பிரிஞ்சி இலை - சிறிது
  • அன்னாசிப் பூ - 1
  • மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
  • தனியா தூள் - 1 தேக்கரண்டி
  • மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
  • சீரக தூள் - 1/2 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  • கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
  • கொத்தமல்லி தழை - 1/4 கட்டு
  • புதினா தழை - 1/4 கட்டு
  • எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும்.
step 1
அரிசியை கழுவி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். ஊறிய அரிசியுடன் 4 கப் தண்ணீர், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, அன்னாசிப்பூ, சிறிது உப்பு, சில துளிகள் எண்ணெய் விட்டு மைக்ரோ அவனின் பாத்திரத்தில் வைத்து முழு சூட்டில் 9 நிமிடங்களும், 75% சூட்டில் 6 நிமிடமும் வைத்து எடுக்கவும்.
step 2
எடுத்த சாதத்தை தட்டில் கொட்டி ஆற விடவும்.
step 3
காளான், வெங்காயம், கொத்தமல்லி தழை, புதினா தழை இவற்றை பொடியாக நறுக்கவும். தக்காளியை அரைத்து வைக்கவும்.
step 4
வேறொரு மைக்ரோ அவனின் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, முழு சூட்டில் 1 நிமிடம் வைத்து எடுக்கவும். அதில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, திரும்பவும் 2 நிமிடம் அவனில் வைத்து எடுக்கவும்.
step 5
பிறகு மிளகாய் தூள், தனியா தூள், மிளகு தூள், சீரக தூள், மஞ்சள் தூள் சேர்த்து கலக்கி 1 நிமிடம் அவனில் வைத்து எடுக்கவும்.
step 6
பிறகு தக்காளி விழுதை சேர்த்து 2 நிமிடம் அவனில் வைத்து எடுக்கவும். தயிர், கரம் மசாலா தூள், பாதி கொத்தமல்லி தழை, பாதி புதினா சேர்த்து கலக்கி 2 நிமிடம் அவனில் வைத்து எடுக்கவும்.
step 7
நறுக்கி வைத்த காளான்களையும், உப்பையும் சேர்த்து நன்கு கலக்கி 4 நிமிடம் அவனில் வைத்து எடுக்கவும்.
step 8
மைக்ரோ அவனின் பாத்திரத்தில் ஆற வைத்த சாதத்தை ஒரு லேயராக பரப்பவும். காளான் கிரேவியில் பாதியை அதன் மேல் பரவலாக வைக்கவும். மீண்டும் சாதத்தை அதன் மேல் பரப்பி, மீதியுள்ள கிரேவியை பரப்பி சாதத்தால் நன்கு மூடவும்.
step 9
அதன் மேல் மீதியுள்ள கொத்தமல்லி, புதினாவை தூவி, மூடி, அவனில் 75% சூட்டில் 8 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.
step 10
எடுத்து சாதம் உடையாமல் நன்கு கலக்கி சூடாக பரிமாறவும். சுவையான மஷ்ரூம் பிரியாணி, சிரமமின்றி அவனில் தயார்.
step 11
அறுசுவையில் 300 க்கும் அதிகமான குறிப்புகள் வழங்கி, மன்றத்தில் ஏராளமான பயனுள்ள குறிப்புகளையும் கொடுத்து வரும் திருமதி. செந்தமிழ்ச்செல்வி அவர்கள் சமையலில் 28 வருடங்கள் அனுபவம் உடையவர். சைவம், அசைவம் என இரண்டிலும் அசத்தக்கூடியவர். இன்னும் ஏராளமான குறிப்புகளை அறுசுவை நேயர்களுக்கு வழங்கவிருக்கின்றார்.
step 12


முந்தைய குறிப்புகள் பக்கத்திற்குச் செல்ல..

comments
செல்வி அக்கா சூப்பர்
ஜனவரி 3, 2008 - 12:00pm - வழங்கியவர் Narthana

செல்வி அக்கா சூப்பர் ...நான் இதை முட்டை வைத்து முயற்சி செய்தேன் நன்றாக உள்ளது.உங்களின் குறிப்பு மிகவும் விளக்கமாகவும் படங்கள் மிகவும் உதவியாகவும் உள்ளது... நன்றி செல்வி அக்கா

நன்றி நர்த்தனா..
ஜனவரி 5, 2008 - 8:38am - வழங்கியவர் senthamizh selvi

ஹாய் நர்த்து,
பாராட்டுக்கு நன்றி.
பாபு தம்பி சொன்னதாலதான் நான் இதை அனுப்பினேன். ஓவன் ரெசிபி நிறைய வேண்டும் என சொல்லியிருக்கார். அது உண்மையும் கூட. நானும் ஓவன் வாங்கிய புதிதில் தேடினேன். எப்படியோ நானே பழகிட்டேன்.
அன்புடன்,
செல்வி.

இந்த குறிப்பே இப்ப தான் கண்ணுல பட்டது :-)
ஜனவரி 7, 2008 - 7:17am - வழங்கியவர் harshini

என்கிட்ட மஷ்ரூம் இல்ல:-( பாக்கும்போதே செய்யனும்போல இருக்கு:-) அவ்வளவு ஈஸியா :-)
நான் நாளைக்கு, வேற காய் போட்டு செஞ்சு பாக்கபோறேனே :-) செஞ்சு பாத்து சொல்றேன்மா, எப்படி வந்ததுன்னு :-)

அன்புடன்
ஹர்ஷினி :)

hello selvi
ஜனவரி 7, 2008 - 12:09pm - வழங்கியவர் silja

நான் மஷ்ரூம் பிரியாணி செய்தேன். டேஸ்ட் ரொம்ப சூப்பெராக இருந்தது. என் பையன் ரொம்ப விரும்பி சாப்பிட்டான்.
thanks for this receipe.
regards
siljavignesh

மஸ்ரூம் பிரியாணி...
ஜனவரி 7, 2008 - 2:37pm - வழங்கியவர் senthamizh selvi

அன்பு சில்ஜா,
குறிப்பை செய்து பார்த்து பாராட்டியமைக்கு நன்றி. தனியாக செய்வதை விட, இந்த பிரியாணி ஓவனில் செய்தால்தான் சுவை கூடும்.
அன்புடன்,
செல்வி.

சூப்பர் சூப்பர் :-)
ஜனவரி 7, 2008 - 7:24pm - வழங்கியவர் harshini

செல்விமா,

நான் இந்த முறையில பிரியாணி சென்சேன். டைமிங்க்ஸ் மட்டும் மாறியது, எங்க மைக்ரோவேவில். அப்புறம் தயிர்க்கு பதில் லெமன் உபயோகிச்சேன். ரொம்ப சூப்பரா வந்தது. இப்ப சென்சு முடிச்சு, உடனே உங்களுக்கு நன்றி சமர்ப்பிக்க வந்தாச்சு :-)

அன்புடன்
ஹர்ஷினி :)erwer

ஜனவரி 8, 2008 - 4:09am - வழங்கியவர் thalika

செல்வீக்கா இது செய்ய சுமார் எத்தனை நேரம் எடுக்கிறது...அடுப்பில் செய்வதிலும் சுலபமா..கன்டிப்பாக இதை செய்து பார்த்துடுவேன்..சீக்கிரம் பதில் கிடைத்தால் இன்றே செய்வேன்.இன்னொரு சந்தேகம் காளான் ஒரு லேயரும் சாதம் ஒரு லேயருமாய் அல்லாது நல்ல கிளறி வைத்தால் என்னாகும்.இதில் காளாம் நீளமா தெரியுதே நான் வாங்குவது குடை போல் ரவுன்டா உள்ளது ..அது நல்லா இருக்காதா

hello selvi
ஜனவரி 8, 2008 - 8:03am - வழங்கியவர் silja

செல்வி நான் மைக்ரோவேவில் தான் செய்தேன். என் கேஸ் தீந்து போன நாள் செய்தேன்
siljavignesh

காளான் பல வகை...
ஜனவரி 8, 2008 - 8:28am - வழங்கியவர் senthamizh selvi

ஹாய் ரூபி,
நலமா? இதை செய்ய 30-40 நிமிடங்கள் ஆகும்.

அடுப்பிலும் செய்யலாம், ஆனால் தம் போடும் போது குக்கரில் தண்ணீர் விட்டு, காளானை லேயராக போட்ட பாத்திரத்தை உள்ளே வைத்து, வெயிட் போடாமல், 10-15 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.

லேயர் லேயராக போட்டால் தான் நன்றாக இருக்கும்.

எந்த காளான் வேண்டுமானாலும் உபயோகிக்கலாம். நான் பயன்படுத்தியது பால் காளான். மற்ற காளான்களை விட இதில் சத்து அதிகம். நீ சொல்வது பட்டன் காளான். தாராளமாக செய்யலாம்.

வாழ்த்துக்கள். நன்றி.
அன்புடன்,
செல்வி.

சூப்பர் செல்விம்மா
ஜனவரி 8, 2008 - 2:44pm - வழங்கியவர் pradeebala

செல்விம்மா நேற்று நான் இந்த பிரியாணி செய்தேன் காளானுக்கு பதிலாக கத்தரிக்காய் சேர்த்து செய்தேன் என்னவருக்கு ரொம்ப பிடித்திருந்தது எனக்கும் தான்

வாழ்த்துக்கள் நன்றி செல்விம்மா
அன்புடன் தீபா

நன்றி தீபு...
ஜனவரி 8, 2008 - 4:05pm - வழங்கியவர் senthamizh selvi

ஹாய் தீபு,
ரொம்ப நன்றி. இந்த செய்முறையை செய்து பார்த்தற்கும், பாராட்டியதற்கும்.
அன்புடன்,
செல்வி.

செல்வீம்மா, அர்ஜென்ட்...
ஜனவரி 9, 2008 - 5:39am - வழங்கியவர் Subha Jayaprakash

செல்வீம்மா,
அர்ஜென்ட்...
இன்னைக்கு இதை அப்படியே செய்யலாம்னு இருக்கேன்...
பால் பற்றி ஒன்னும் சொல்லலியே...
அதை எங்கே சேர்ப்பது???
க்ளியர் பண்ணுங்க பாவாவிற்கு (ஹஸ்பன்டை இப்படித்தான் கூப்பிடுவேன்) செய்து கொடுத்து அசத்தனும்.
உடனடி பதில் அம்மா,....
வெயிட் பன்றேன்...
அதனுடன் சாப்பிட வீட்டுக்கு வாங்க :-)

காளான் பிரியாணி..
ஜனவரி 9, 2008 - 7:56am - வழங்கியவர் senthamizh selvi

அன்பு சுபா,
மன்னிக்கவும். சிறிதளவு குங்குமப்பூவை பாலில் கரைத்து லேயராக போடும் போது மேலே தெளிக்கவும். குங்குமப்பூ போடவில்லையெனில் பால் தேவையில்லை. நான போடாததால் மறந்து விட்டேன். குங்குமப்பூ கலர் ஃபுல்லாக இருக்கத்தான். மற்றபடி அவசியம் இல்லை.
நன்றி.
அன்புடன்,
செல்வி,

mushroom biriyani super.. :-)
ஜனவரி 9, 2008 - 2:00pm - வழங்கியவர் Subha Jayaprakash

செல்வீம்மா,
மஸ்ரூம் பிரியாணி டாப்போ டாப்...
ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது...
இன்று..
மஸ்ரூம் பிரியாணி, பீஸ் மசாலா, காலிஃப்ளவ்ர் ஃப்ரை...
தயிர் சாதம் , ஊறுகாய் அவ்ளோதான்...
உருளைக்கிழங்கு மசாலா செய்ய டைம் இல்லை....

மஸ்ரூம் பிரியாணி
ஜனவரி 17, 2008 - 3:21pm - வழங்கியவர் Subha Jayaprakash

செல்வி'ம்மா,
இன்று மறுபடியும் மஸ்ரூம் பிரியாணி செய்தேன்...
சூப்பர் தேங்கஸ் டூ மஸ்ரூம் பிரியாணி..
என்னோட சார்பில் அப்பாவிடம் சொல்லி சமையல் செய்த கைக்கு தங்க வளையல் வாங்கி விடுங்கள்... எப்டி...

மஸ்ரூம் பிரியாணி...
ஜனவரி 18, 2008 - 3:54pm - வழங்கியவர் senthamizh selvi

ஹாய் சுபா,
பாராட்டுக்கு நன்றி. அப்பா தங்க வளையல் வாங்கித் தரமாட்டாராம். பிளாட்டின வளையல்தான் வாங்கித் தருவாராம்.
அன்புடன்,
செல்வி.

செல்வி அக்கா மஸ்றூம் பிறியாணி
ஜனவரி 26, 2008 - 2:55pm - வழங்கியவர் அதிரா

செல்வி அக்கா மஸ்றூம் பிறியாணி மிகவும் அருமை.
நீங்கள் குறிப்புடன் படங்கள் இணைத்தபடியால் அதைப் பார்த்ததும் சாப்பிட வேண்டும்போல் இருந்தது. செய்தேன் மிக அருமை. பிரிஞ்சி இலை, அன்னாசி பூ நான் கண்டதில்லை அதனால் சேர்க்கவில்லை. இப்போதுதான் முதல் தடவை கொத்தமல்லி இலை சமையலிற்கு சேர்த்தேன். அனைத்தும் மிக அருமை. சமைத்து சாப்பிட்டு விட்டு உங்களைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. எனது பாராட்டுக்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

பாராட்டுக்கு நன்றி அதிரா...
ஜனவரி 27, 2008 - 4:18pm - வழங்கியவர் senthamizh selvi

அன்பு அதிரா (அழகான பெயர்!),
முதன் முதலாக உங்களிடம் பேசுகிறேன். பேச வேண்டும் என அவ்வப்போது நினைப்பேன். நேரமின்மையே காரணம். பிரிஞ்சி இலை, அன்னாசிப்பூ இரண்டுமே வாசனைக்காக பயன்படுத்துவதுதான். மற்றபடி பெரிய வித்தியாசம் இருக்காது. எனக்கு மசால் வாசனை ரொம்ப பிடிக்காது என்பதால், என்னுடைய குறிப்புகளில் குறைவான மசாலாதான் இருக்கும். உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. நேரம் கிடைக்கும் போது மீண்டும் பேசுவோம். நன்றி.
அன்புடன்,
செல்வி.