இது இலங்கையில் மிகவும் பிரபலமான ஒரு இனிப்பு வகை ஆகும். இதனை பலர் பல முறையில் செய்வார்கள். இங்கு கொடுத்திருப்பது மிகவும் சுலபமான முறை. இதை எனது நண்பி ஒருவர் கூறினார். செய்து பார்த்தேன். மிகவும் சுலபமாக இருந்ததோடு சுவையும் நன்றாக இருந்தது. :)
தேவையானப் பொருட்கள்
- தேங்காய்ப்பால் - 2 டின்
- சிவப்பு அரிசிமா - 1/2 டின் (தேங்காய்ப்பால் டின்னால்)
- தண்ணீர் - 1 1/2 டின் (தேங்காய்ப்பால் டின்னால்)
- சர்க்கரை/கித்துள்/பிரவுண் சீனி - 400 கிராம் (அல்லது தேவையான இனிப்புக்கு ஏற்ப)
- வறுத்த உடைத்த பயறு - ஒரு கைப்பிடி
- கஜு (முந்திரி) - 25
- பட்டர் - 1 தேக்கரண்டி
- வனிலா/ஏலக்காய் - சிறிது
செய்முறை
- கஜுவை பட்டரில் வறுத்து எடுக்கவும்.
- கித்துள்/சர்க்கரையை சிறிய துண்டுகளாக நொருக்கவும். பிரவுண் சீனியாயின் அப்படியே போடலாம்.
- பின்னர் ஒரு பெரிய பாத்திரத்தில் தேங்காய்ப்பால், சிவப்பு அரிசிமா, தண்ணீர், சர்க்கரை/கித்துள்/பிரவுண் சீனி, பயறு என்பவற்றை ஒன்றாக கலந்து சிறிது அதிகமான தீயில் வைத்து எண்ணெய் பிறக்கும் வரை கிளறவும்.
- எண்ணெய் பிறந்து கலவை சட்டியில் ஒட்டாத பதம் வந்ததும், ஏலக்காய்/வனிலா, கஜு சேர்த்து கிளறி ஒரு தட்டில் கொட்டி சமமாக பரவி ஆற விடவும்.
- சுவையான தொதல் தயார். ஆறியதும் துண்டுகளாக்கி பரிமாறவும்.
குறிப்பு
கலவையை அடுப்பில் வைத்து கிளறும் போது கலவை கொதித்து தெறிக்கப் பார்க்கும். எனவே கைக்கு உறை போட்டு அல்லது நீண்ட கைப்பிடி உள்ள கரண்டி/அகப்பையால் கிளறவும்.கலவை நன்கு சுருள 40 - 45 நிமிடங்கள் எடுக்கும் கலவை நன்கு சுருண்டதும் தேங்காய் எண்ணெய் பிறக்கும். அதனை வடித்து எடுத்து விடலாம். உடனே சாப்பிடுவதை விட வைத்து அடுத்த நாள் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். :)
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
25 - 30 துண்டுகள் |
10 நிமிடங்கள் |
45 நிமிடங்கள் |